ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் போன்ற நாட்டின் முன்னணி உயர் கல்வி நிலைங்களில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது. உயர் கல்வி நிறுவனங்களில் சாதியின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதாகவும் இதன் காரணமாக மாணவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாவதாக தொடர் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது. 


சமீபத்தில் கூட, மும்பையில் உள்ள ஐஐடியில் 18 வயது மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஐ.ஐ.டி. மும்பையில் பட்டியல் சாதி மாணவர்களுக்கு எதிரான பாகுபாடு காரணமாக அவர் தற்கொலைக்குத் தூண்டப்பட்டதாக மாணவர் அமைப்பினர் குற்றம் சாட்டினர்.


இந்த நிலையில், மேற்குவங்கம் மாநிலம் கரக்பூரில் உள்ள ஐ.ஐ.டியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி வளாகத்தில் அவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தை சேர்ந்தவர் தேவிகா பிள்ளை.


ஐ.ஐ.டி கரக்பூரில் உயிரி தொழில்நுட்பம் மற்றும் உயிர்வேதியியல் பொறியியல் படிப்பு படித்து வருகிறார். நான்காம் ஆண்டு மாணவியான இவர், சிறிது நாள்களுக்கு முன்புதான் தன்னுடைய சொந்த ஊருக்கு சென்றுவிட்டு கல்லூரிக்கு திரும்பியுள்ளார்.


ஐஐடி கரக்பூரில் சரோஜினி நாயுடு ஹால், இந்திரா காந்தி ஹால் என இரு அரங்குகள் அமைந்துள்ளன. இந்த இரண்டு அரங்குகளுக்கு இடையேயான பகுதியில் தேவிகாவின் சடலத்தை மாணவர்கள் கண்டனர். இந்த சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகத்திற்கு மாணவர்கள் உடனடியாக தகவல் தெரிவித்தனர்.


தகவல் அறிந்து காவல்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். இதுகுறித்து காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "இது தற்கொலையா அல்லது வேறு ஏதாவது காரணத்தால் இந்த சம்பவம் நடந்ததா என்பது குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை.


மாணவியின் மரணம் குறித்து விசாரணையை தொடங்கியுள்ளோம். பிரேதப் பரிசோதனைக்காக மாணவியின் உடலை கரக்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது" என்றார்.


ஐ.ஐ.டி கரக்பூரில் இதேபோன்ற ஒரு சம்பவம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்துள்ளது. கல்லூரியில் படித்து வந்த மாணவர் பைசான் அகமதுவின் உடல் சிதைந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விடுதியில் கண்டெடுக்கப்பட்டது. இவர் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்தவர்.


இதுகுறித்து அவரது தாயார் கூறுகையில், "என் மகனை பொருளை கொண்டு தாக்கி பின்னர் துப்பாக்கியால் சுட்டிருக்கலாம் என நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தடயவியல் நிபுணர் குழு தெரிவித்துள்ளது. எனவே, நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.


சமீபத்திய QS உலக பல்கலைக்கழக தரவரிசை 2025 இன்படி, IIT கல்லூரிகளில் மூன்றாவது சிறந்த கல்லூரியாக ஐ.ஐ.டி கரக்பூர் உள்ளது. நாட்டின் நான்காவது சிறந்த கல்வி நிறுவனமாகவும் உள்ளது.