ஐஐடி நுழைவுத் தேர்வில் விசாரணைக் கைதி ஒருவர் வெற்றி பெற்று அகில இந்திய அளவில் 54 வது இடமும் பெற்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.


பிஹார் மாநில நவடா கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சூரஜ் குமார் என்ற கவுஸ்லேந்திரா (23). இவர் அண்மையில் நடைபெற்ற ரூர்கீ ஐஐடியால் நடத்தப்பட்ட முதுநிலை பட்டப்படிப்புக்கான (Joint Admission Test for Masters JAM) 2022 நுழைவுத் தேர்வை எழுதியுள்ளார். நாடு முழுவதும் நடந்த இந்தத் தேர்வில் இவர் அனைத்திந்திய அளவில் 54வது இடத்தைப் பெற்றுள்ளார்.


ஒவ்வோர் ஆண்டும் இத் தேர்வு பிப்ரவரி மாதம் நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் ஐஐடி கல்வி நிறுத்தில் முதுநிலை அறிவியல் பாடப்பிரிவுகளில் சேரலாம். அதேபோல் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் எனப்படும் ஐஐஎஸ்சியில் ஒருங்கிணைந்த முனைவர் பட்டப் படிப்பிலும் சேரலாம்.


இந்தத் தேர்வில் இவர் அனைத்திந்திய அளவில் 54வது இடத்தைப் பெற்றுள்ளார். சூரஜின் சொந்த ஊர் மோஸ் கிராமம். இவர் கடந்த 2021 ஏப்ரல் 17 முதல் சிறையில் உள்ளார். ஆனால், சிறையில் இருந்தவாறே ஐஐடி தேர்வுக்கு தயாராகியுள்ளார். சிறையில் இருந்த படித்த நபர்களிடமும், சிறை அதிகாரிகளிடமும் கணக்குப் பாடத்துக்கான டியூஷனை எடுத்துக் கொண்டுள்ளார். சிறையிலிருந்தவாறே ஐஐடி நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர் அதில் 54 வது இடத்தைப் பிடித்து ஒட்டுமொத்த சிறையையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.


எதற்காக சிறை வந்தார்..
சூரஜ் இதற்கு முன்னதாக ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் தங்கி பொறியியல் தேர்வுகளுக்காக பயிற்சி எடுத்து வந்துள்ளார். கடந்த மார்ச் 2021ல் சொந்த ஊரில் கழிவுநீர் கால்வாய் விவகாரம் தொடர்பாக இரண்டு குழுக்களுக்கு இடையா சண்டை நடந்துள்ளது. இந்த சண்டையில் சஞ்சய் யாதவ் என்பவர் கொல்லப்பட்டார். இது தொடர்பாக 11 பேர் கைதாயினர். இவர்களில் சூரஜும் ஒருவர். இந்த வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் சூரஜ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.




எத்தனை ஐஐடிக்கள் உள்ளன..


1947 ஆம் ஆண்டு இந்தியா விடுதலையான பின்னர் இந்தியாவின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்காக ஒரு திறமைமிக்க மனிதவளத்தை வளர்த்தெடுக்கும் நோக்குடன் அறிவியலாளர்களையும் பொறியாளர்களையும் உருவாக்க ஐஐடி தொழில்நுட்ப கல்வி நிலையங்கள்உருவாயின. 


தற்போதைய ஐஐடிகள்:
இந்திய தொழில்நுட்பக் கழகம் கரக்பூர் 
இந்திய தொழில்நுட்பக் கழகம் மும்பை 
இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை 
இந்திய தொழில்நுட்பக் கழகம் கான்பூர் 
இந்திய தொழில்நுட்பக் கழகம் தில்லி 
இந்திய தொழில்நுட்பக் கழகம் குவஹாத்தி 
இந்திய தொழில்நுட்பக் கழகம் ரூர்க்கி 


புதிய ஐஐடிகள்:
இந்திய தொழில்நுட்பக் கழகம் பஞ்சாப் 
இந்திய தொழில்நுட்பக் கழகம் புவனேஸ்வர் 
இந்திய தொழில்நுட்பக் கழகம் ஐதராபாத் 
இந்திய தொழில்நுட்பக் கழகம் காந்திநகர் 
இந்திய தொழில்நுட்பக் கழகம் பட்னா 
இந்திய தொழில்நுட்பக் கழகம் ராஜஸ்தான் 
இந்திய தொழில்நுட்பக் கழகம் மண்டி 
இந்திய தொழில்நுட்பக் கழகம் இந்தூர் 
இந்திய தொழில்நுட்பக் கழகம் (பிஎச்யூ) வாரணாசி 
இந்திய தொழில்நுட்பக் கழகம் பாலக்காடு 
இந்திய தொழில்நுட்பக் கழகம் திருப்பதி


ஆகிய ஊர்களில் ஐஐடி கல்வி நிறுவனங்கள் உள்ளன.