மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் இருந்து தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் சென்ற இண்டிகோ விமானம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து இன்று நாக்பூருக்கு திருப்பி விடப்பட்டது.


இதுகுறித்து இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "ஜபல்பூரில் இருந்து ஹைதராபாத் செல்ல வேண்டிய 6E-7308 விமானம். இதற்கு, இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் நாக்பூர் சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.


விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: விமானம் தரையிறங்கியதும், பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டனர். இதையடுத்து, கட்டாய பாதுகாப்பு சோதனை உடனடியாக மேற்கொள்ளப்பட்டன. பயணிகளுக்கு உணவு வழங்கப்பட்டது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "விமானத்தின் குளியலறையில் கண்டெடுக்கப்பட்ட காகிதத்தில் வெடிகுண்டு மிரட்டல் செய்தி எழுதப்பட்டிருந்தது. இருப்பினும், பாதுகாப்பு ஏஜென்சிகளின் முழுமையான சோதனையில் சந்தேகத்திற்குரிய எதுவும் கிடைக்கவில்லை" என்றார்.


இதுதொடர்பாக விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், "மதியம் 2 மணிக்கு விமானம் மீண்டும் தனது பயணத்தைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்றார்.


நடந்தது என்ன? இதற்கு முன்பு, கடந்த ஜூன் 19ஆம் தேதி, மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் அமைந்துள்ள தேவி அஹில்யா பாய் ஹோல்கர் சர்வதேச விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதை தொடர்ந்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


விமான நிலைய அதிகாரிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. பின்னர், அவர்கள் மாவட்டத்தில் உள்ள ஏரோடிரம் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர். இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் (டிசிபி, மண்டலம் 1) வினோத் குமார் மீனா கூறுகையில், "தேவி அஹில்யா பாய் ஹோல்கர் சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்துவிடுவோம் எனக் கூறி, விமான நிலைய அதிகாரிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.


நாட்டின் பிற நகரங்களிலும் வெடிகுண்டு வைப்போம் என மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, மாவட்டத்தில் உள்ள ஏரோடிரம் காவல் நிலையத்தில் விமான நிலைய ஆணையம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.


இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இந்த விவகாரம் குறித்து அதிகாரியிடம் போலீஸார் தகவல் கேட்டுள்ளனர். கடந்த காலங்களிலும் இவ்வாறான மிரட்டல்கள் விடுக்கப்பட்டிருந்த நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்றார்.