கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமைச் செயல் அலுவலராக இருப்பவர் சுந்தர் பிச்சை. மதுரையில் பிறந்து ஐஐடி கரக்பூரில் பட்டம் பெற்ற சுந்தர் பிச்சை, கடந்தாண்டு தனது சொத்து மதிப்பில் ஐந்தில் ஒரு பகுதியை இழந்துள்ளதாக ஐஐஎஃப்எல் ஹுருன் இந்தியா 2022ஆம் ஆண்டுக்கான பணக்காரர் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நிகர சொத்து மதிப்பில் 20 சதவீதம் சரிந்து, 5,300 கோடி ரூபாயாக இருந்தாலும், பட்டியலில் உள்ள முதல் 10 பணக்கார தொழில்முறை மேலாளர்களின் பட்டியலில் அவரும் இடம் பிடித்துள்ளார்.


இந்திய பணக்கார தொழில்முறை மேலாளர்களின் பட்டியலில் சுந்தர் பிச்சை 7ஆவது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் உள்ள தொழில்முறை மேலாளர்கள், அவர்கள் பணிபுரிந்த நிறுவனங்களின் பங்குகளை வாங்கியதன் மூலம் செல்வத்தை குவித்திருப்பது தெரிய வந்துள்ளது.


அரிஸ்டா நெட்வொர்க்கின் ஜெயஸ்ரீ உல்லால் 16,600 கோடி ரூபாய் சொத்துக்களுடன் முதலிடத்தில் உள்ளார். ஆரக்கிள் நிறுவனத்தைச் சேர்ந்த தாமஸ் குரியன் இரண்டாவது இடத்திலும், பாலோ ஆல்டோ நெட்வொர்க்கின் நிகேஷ் அரோரா மூன்றாவது இடத்திலும் உள்ளனர். செப்டோவின் ஆதித் பாலிச்சா மற்றும் கைவல்யா வோஹ்ரா ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியலில் முதல் முறையாக இடம்பிடித்துள்ளனர்.


மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லாவின் நிகர மதிப்பு, 2021 இல் 6,200 கோடி ரூபாயாக இருந்தது. முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் இதில் எந்த மாற்றும் ஏற்படவில்லை.


ஈக்விட்டி நிறுவனமான ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனத்தின் துணைத் தலைவரும், மாஸ்டர்கார்டின் முன்னாள் செயல் தலைவருமான அஜய்பால் சிங் பங்கா, நாதெல்லா, பிச்சை மற்றும் நாராயண் ஆகியோரை விட அதிக சொத்துகளை வைத்துள்ளார்.


மொத்தம் 1,000 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வைத்திருக்கும் 1,103 நபர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


1972ஆம் ஆண்டு மதுரையில் பிறந்த சுந்தர் பிச்சை கரக்பூர் ஐஐடியில் உலோக பொறியியலில் பட்டம் பெற்றார். அதனையடுத்து அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படித்த சுந்தர் பிச்சை 2004ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். அதனையடுத்து தன் உழைப்பாலும், திறமையாலும் அந்நிறுவனத்தின் சிஇஓவாக உயர்ந்துள்ளார். இந்தாண்டு தொடக்கத்தில்தான், அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. 


சத்யா நாதெல்லா 1967ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தார். மணிப்பால் பல்கலைக்கழகத்தில் மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்புப் பொறியியலில் இளங்கலை பட்டம் பெற்ற அவர் விஸ்கான்சின் பல்கலைகழகத்தில் கணினி அறிவியல் துறையில் பட்டமேற்படிப்பு முடித்தார். 


அதன் பின்னர் அவர் சிக்காகோ பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார். 1992ஆம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் சேர்ந்த சத்யா, அந்த நிறுவனத்திற்கு பல்வேறு பங்களிப்பை செய்திருக்கிறார். இதனையடுத்து அவர் 2014ஆம் ஆண்டு அந்நிறுவத்தின் சிஇஓவாக அறிவிக்கப்பட்டார். இவருக்கும் இந்தாண்டுதான் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது.