கரோனாவிடமிருந்து குழந்தைகளைக் காக்க நாம் தயாராக இருக்கிறோமா?

 

சீனாவின் வூஹான் நகரில் முதல் கரோனா நோயாளி அடையாளம் காணப்பட்ட நாள் முதல் இன்றுவரை உலகம் முழுவதுமே கொரோனாவால் குழந்தைகள் மோசமாக பாதிக்கப்பட்டதாக தகவலோ புள்ளிவிவரமோ இல்லை. ஆனால், கொரோனா வைரஸ் தனது செயல்பாட்டில் எதிர்காலத்தில் மாற்றங்களைக் காட்டினால், குழந்தைகளும் தீவிர பாதிப்புக்கு உள்ளாகலாம் என எச்சரிக்கைகள் வந்து கொண்டே இருக்கின்றன.

பிரதமர் நரேந்திர மோடியின் அறிவியல் ஆலோசகர் டாக்டர் கே.விஜயராகவன், கொரோனா மூன்றாவது அலை ஏற்பட்டால் குழந்தைகள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள் என ஏற்கெனவே எச்சரித்தரிந்தார் என்பதும் நினைவுகூரத்தக்கது.



 

இந்நிலையில், கொரோனா பாதிப்பு தொடர்பான அன்றாட ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய நிதிஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால், சில முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

அவர் கூறியதாவது:

கொரோனா இதுவரை குழந்தைகள் மத்தியில் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. குழந்தைகள் மத்தியில், கொரோனா பெரும்பாலும் ஏசிம்ப்டாமேட்டிக் என்று கூறப்படும் அறிகுறியற்ற தொற்றாகவே கடந்து சென்றுவிடுகிறது. அவர்களுக்கு மிகமிகக் குறைவான அளவில் அறிகுறியோ அல்லது அறிகுறியே இல்லாமலேயோ கொரோனா போய்விடுகிறது. தொற்று அவர்கள் உடலில் பல்கிப்பெருகி கோர உருவம் எடுக்கவில்லை. நமக்குக் கிடைத்த புள்ளிவிவரங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை மிகமிக் குறைவு என்றே கூறுகிறது. இருப்பினும், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆயத்தப்பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

குழந்தைகளை கொரோனா இரண்டு வழிகளில் பாதிக்கிறது. ஒன்று அவர்களுக்கு நிமோனியா போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன. இரண்டாவதாக, கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்த குழந்தைகளிடம் மிஸ்-சி (MIS-C) என்னும் அழற்சி அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் Multi-inflammatory syndrome in Children என்று கூறப்படும் இந்த அழற்சி குழந்தைகள் உடலின் உட்புற உறுப்புகளை கடுமையாக பாதிக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது.

15 வயதிற்குக் கீழ் உள்ள கொரோனாவால் பாதித்து குணமடைந்த குழந்தைகள் அல்லது கோவிட் -19 அறிகுறிகளைக் காட்டிய நான்கு வாரங்களுக்குள் இந்த மிஸ்-சி நோயால் பாதிக்கப்படுகின்றனர். இது மிகமிகக் குறைந்த எண்ணிக்கையிலான குழந்தைகளையே பாதித்துள்ளது.

இப்போதைக்கு கொரோனா குழந்தைகளை பெரிதளவில் பாதிக்காவிட்டாலும் எதிர்காலத்தில் கொரோனா வைரஸ் குழந்தைகள் மீதான போக்கை மாற்றிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.



 

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி:

குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி தொடர்பாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவிஷீல்டு, கோவேக்சின், ஸ்புட்னிக் வி என எந்தவொரு தடுப்பூசியுமே இதுவரை குழந்தைகளுக்கு செலுத்த அனுமதிக்கப்படவில்லை. கோவேக்சின் இப்போது 2 முதல் 18 வயதினருக்கு தடுப்பூசி வழங்குவதை பரிசோதித்து வருகிறது.

இதற்கிடையில், இந்தியன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸின் முடிவை, மேற்கோள் காட்டியுள்ள எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா, குழந்தைகள் கொரோனாவால் தீவிரமாகப் பாதிக்கப்படுவார்கள் என்பதற்கு எந்த ஒரு அறிகுறியும் இதுவரை தென்படவில்லை என்று கூறியிருக்கிறார்.

 



மூன்றாவது அலையை சமாளிக்க தயாரா?

இருப்பினும், மூன்றாவது அலை ஏற்பட்டு அதில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டால் அப்போது நிலைமையை சமாளிக்க நம் மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக இருக்கிறதா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளைப் பற்றிய புள்ளிவிவரத்தை நுணுக்கமாக அணுகுமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், மகாராஷ்டிராவின் அகமதுநகரில் மே மாதத்தில் மட்டும் 8000 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டது கவனிக்கத்தக்கது.