ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்த தையல்காரர் ஒருவரின் தலையை வெட்டி கும்பல் ஒன்று கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 






நுபுர் சர்மா விவகாரம் தொடர்பாக சமூக வலைதளத்தில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலின் தொடர்ச்சியாக, உதய்பூர், மால்தாஸ் தெருவில்  இந்தக் கொலை சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. மால்தாஸ் தெரு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கலவரங்கள் நிகழாமல் இருக்க கடைகள் அடைக்கப்பட்டு, காவல் துறையினர் தயார்ப்படுத்தப்பட்டு உஷார் நிலையில் உள்ளனர்.


இந்நிலையில், இச்சம்பவம் குறித்து பேசிய ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அஷோக் கெலாட், "இச்சம்பவம் வலி மிகுந்ததாகவும் அவமானகரமானதாகவும் உள்ளதாகவும், பகைமையைத் தூண்டும் சூழலை இச்சம்பவம் உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், உதய்பூர் பகுதி மக்களை அமைதி காக்குமாறும்" வேண்டுகோள் விடுத்துள்ளார்.


கொலை செய்யப்பட்ட தையல்காரரிடம் இவ்வழக்கு தொடர்பாக ஏற்கெனவே காவல் துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக இச்சம்பவம் குறித்து பேசிய ராஜஸ்தான் மாநில எதிர்க்கட்சித் தலைவர் குலாப் சந்த் கட்டாரியா, "இச்சம்பவம் குறித்து முதலமைச்சர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் பேசியுள்ளேன். இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளேன்" என்றார்.


இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கொலையாளிகளை தேடி வந்த நிலையில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதற்கிடையே, மக்கள் அனைவரும் அமைதி காக்கும்படி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில், "உதய்பூரில் நடந்த கொடூர கொலை சம்பவத்தால் நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். மதத்தின் பெயரால் நடக்கும் கொடுமைகளை பொறுத்துக் கொள்ள முடியாது. 


இந்தக் கொடுமையை பரப்பியவர்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து வெறுப்பை வெல்ல வேண்டும். அமைதியையும் சகோதரத்துவத்தையும் பேணுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.