காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மெக்கானிக்குகளுடன் கலந்துரையாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


எளிய மக்களை சந்திக்கும் ராகுல் காந்தி:


அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றங்களில் நடைபெற்று வருகிறது. ஆனால், இதுகுறித்து பெரிதும் அலட்டிக் கொள்ளாத ராகுல் காந்தி, தொடர்ந்து எளிய மக்களை நேரடியாக சந்தித்து வருகிறார். அண்மையில் ஹரியானா சென்றபோது, வயல்வெளிக்கே சென்று விவசாயிகளோடு கலந்துரையாடியதோடு நாற்று நட்டு, டிராக்டர் ஓட்டி விவசாய பணிகளையும் மேற்கொண்டார். அதைதொடர்ந்து, தற்போது மெக்கானிக்குகள் உடன் ராகுல் காந்தி கலந்துரையாடிய வீடியோவை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.


மெக்கானிக்குகள் உடனான சந்திப்பு:


காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 27-ந் தேதி டெல்லி கரோல் பாக் பகுதிக்கு சென்றார். அப்போது, அப்பகுதியிலுள்ள மெக்கானிக் ஷாப் ஒன்றிற்கு சென்ற அவர், அங்கிருந்த ஊழியர்களுடன் கலந்துரையாடினார். அதுதொடர்பான வீடியோவில், மோட்டார் சைக்கிளை பழுது பார்க்கும் நுணுக்கங்களை கேட்டு தெரிந்து கொண்டதோடு, தானே ஒரு மோட்டார் சைக்கிளையும் பழுது நீக்கி சரி செய்தார்.  






அனுமதிக்காத பாதுகாவலர்கள், திருமணம் எப்போது?


தொடர்ந்து அவர்களுடன் உரையாடும் போது “தன்னிடம் கேடிஎம்390 ரக மோட்டார் சைக்கிள் இருக்கிறது. ஆனால், அதை ஓட்ட எனது பாதுகாவலர்கள் அனுமதிப்பதில்லை. மீறினால் கடிதம் எழுதிவிடுகிறார்கள்” என ராகுல் காந்தி கூறியுள்ளார். எப்போது நீங்கள் திருமணம் செய்து கொள்வீர்கள், நாங்கள் எப்போது அதை பார்ப்பது என மெக்கானிக்குகள் கேட்க, ஒருநாள் நடக்கும் பார்க்கலாம் என ராகுல் காந்தி விளக்கமளித்தார்.


பாராட்டிய ராகுல் காந்தி:


தொடர்ந்து, ஒரு வாகனத்தின் பழுது நீக்கப்பட்டது குறித்து பேசிய ராகுல் காந்தி, உங்களின் முயற்சியின் மூலம் தான் இந்த வாகனம் தயாரகியுள்ளது. உங்களது பணி மதிக்கப்பட வேண்டியுள்ளது. அது முன்னேற்றம் காண வேண்டும் என கூறியுள்ளார். 


அனைவருக்குமான வளர்ச்சி:


வீடியோவின் இறுதியில் பேசிய ராகுல் காந்தி, பாரத ஒற்றுமை பயணத்தில் அடுத்து ஒரு சிறிய நிறுத்தம். சூப்பர் மெக்கானிக்குகளை சந்தித்தேன். வெளிப்படையாக உரையாடினேன். அவர்களின் கனவுகளையும், சிரமங்களையும் புரிந்துகொள்ள முயன்றேன். உமேத் ஷா என்ற மூத்த மெக்கானிக், எனக்கு நுணுக்கங்களை கற்றுக்கொடுத்தார். வறுமை காரணமாக, படிப்பை நிறுத்தி, தானும், தன் சகோதரரும் மெக்கானிக் ஆகிவிட்டதாக அவர் கூறினார். பஸ்வான், சென் என்ற மற்ற மெக்கானிக்குகள், சொற்ப வருமானத்தில் குடும்பத்தை நடத்துவது சிரமமாக இருப்பதாக தெரிவித்தனர். இதுபோல், நிறைய பேர் தங்கள் உடல்நலத்தை கெடுத்துக்கொண்டு கடுமையாக உழைப்பதை பார்த்து இருக்கிறேன். நமது மெக்கானிக்குகள், ஆட்டோமொபைல் தொழிலை நிலைநிறுத்த பாடுபடுகிறார்கள். அவர்களுக்கு நல்ல வசதிகளும், வாய்ப்புகளும் அளிக்கப்பட வேண்டும். ஆட்டோமொபைல் தொழிலை வலுப்படுத்த அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு தனிமனிதரின் வளமையில்தான் இந்தியாவின் உண்மையான முன்னேற்றம் இருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.