பாஜக ஆளும் மாநிலங்களில் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. உடல் பருமன் மிக்க காவல்துறை அதிகாரிகளை பதவியில் இருந்து தூக்க அஸ்ஸாம் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. காவல்துறையில், யார் எல்லாம் பருமனாக இருக்கிறார்களோ அவர்களின் பட்டியலை அஸ்ஸாம் காவல்துறை தயார் செய்தது.


அஸ்ஸாம் முதலமைச்சர் அதிரடி: 


அவர்களுக்கு விருப்பு ஓய்வு அளிக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்திருந்தார். பணிபுரிவதற்கு தகுதியற்ற 650 அதிகாரிகளுக்கு விருப்ப விருப்ப ஓய்வு அளிக்கப்படும் என அசாம் காவல்துறை தலைவர் ஜி.பி.சிங் தெரிவித்திருந்தார். 


அஸ்ஸாமை தொடர்ந்து, ஹரியானாவில் பருமன் மிக்க காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதிக எடை கொண்ட காவலர்கள் மீண்டும் உடல் தகுதி பெறும் வரை காவலில் நிற்க வைக்க பணிக்கு மாற்றப்படுவார்கள் என ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ் உத்தரவிட்டுள்ளார்.


உள்துறை கூடுதல் தலைமைச் செயலருக்கு எழுத்துப்பூர்வமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில், "பல காவல்துறை அதிகாரிகள் அதிக எடையுடன் இருக்கின்றனர். காவல் நிற்கும் பணிக்கு அவர்கள் மாற்றப்படுவார்கள். இதனால் உடல் எடை அதிகரிக்கும் காவலர்களுக்கு உடற்பயிற்சியின் மூலம் உடற்தகுதி கிடைக்கும்.


ஹரியானாவிலும் கிடுக்குப்பிடி:


காவல்துறை அதிகாரிகள்/பணியாளர்களின் உடற்தகுதியைப் பேணுவதற்காக, அதிக உடல் எடை கொண்ட அனைத்து காவல்துறை அதிகாரிகளும்/ பணியாளர்களும் காவல் பணிக்கு மாற்றப்பட்டு, அவர்கள் பணிக்குத் தகுதி பெறாதவரை உடற்பயிற்சி செய்ய வேண்டும் என நான் விரும்புகிறேன்" என குறிப்பிடப்பட்டுள்ளது. 


ஹரியானா காவல்துறையில், தற்போது 75,000 காவல்துறை அதிகாரிகள் பணிபுரிந்து வருகின்றனர். அஸ்ஸாமை பொறுத்தவரையில், உடல் பருமனான அனைத்து அதிகாரிகளுக்கும் (பிஎம்ஐ 30+) உடல் எடையை குறைக்க மேலும் மூன்று மாதங்கள் வழங்கப்படும். அதன் பிறகு, அவர்களுக்கு விருப்ப ஓய்வு (விஆர்எஸ்) அளிக்கப்படும். ஹைப்போ தைராய்டிசம் போன்ற மருத்துவ காரணங்கள் உள்ளவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட உள்ளது.


அதிக மது அருந்தும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பருமன் மிக்க காவல்துறை அதிகாரிகள் அடங்கிய பட்டியலை அஸ்ஸாம் காவல்துறை கடந்த வாரம் தயார் செய்தது. முழுமையான ஆய்வுக்கு பிறகு, இவர்களுக்கு விருப்பு ஓய்வு அளிக்கப்படும் என அஸ்ஸாம் டிஜிபி தெரிவித்திருந்தார்.


மது அருந்துவதால் உடலில் பல பிரச்னைகள் ஏற்படுகிறது. அதிக அளவில் மது அருந்தும் பழக்கம் தனிப்பட்ட அளவில் மட்டும் இன்றி சமூக அளவிலும் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்துகிறது. எனவே, மக்களிடையே மது அருந்தும் பழக்கத்தை குறைக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.