ஞானவாபி மசூதியில் வழிபாடு நடத்த கோரி 5 இந்து பெண்கள் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது என வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ள பகுதியில் இருக்கும் ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஞானவாபி மசூதி வளாக சுவரில் இந்து கடவுள்களின் சிலைகள் இருப்பதாகவும், அதை வழிபட அனுமதிக்கும்படியும்  5 பெண்கள் வழக்கு தொடர்ந்து இருந்தனர். 


இந்த 5 பெண்களின் கோரிக்கை மனுவுக்கு எதிராக அஞ்சுமன் இண்டெஜிமியாமஸ்ஜித் கமிட்டி சார்பிலும் வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உத்தர பிரதேச மாவட்ட நீதிமன்ற நீதிபதி விகே. விஸ்வேஷ் தீர்ப்பளித்தார். 






வழக்கு பின்னணி:


உத்தரப் பிரதேசம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் ஞானவாபி மசூதி அமைந்துள்ளது.  இந்த மசூதி, கோயிலை இடித்து முகலாய பேரரசர் அவுரங்கசீப்பால் கட்டப்பட்டதாக புகார் கூறப்படுகிறது. மேலும், மசூதி சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை தினசரி தரிசிக்க உத்தரவிடக் கோரிய வழக்கும் உள்ளது. வாரணாசியை சேர்ந்த இந்துப் பெண்கள் 5 பேர் சேர்ந்து இந்த வழக்கைத் தொடர்ந்தனர்.


இந்த வழக்கில், வாரணாசி சிவில் நீதிமன்ற நீதிபதி ரவி குமார் திவாகர்  3 நாட்கள் கள ஆய்வு மற்றும் ஆய்வு முழுமையாக வீடியோ பதிவும் செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்,. அதன்படி, ஞானவாபி மசூதிக்குள் கள ஆய்வு நடைபெற்றது.


கள ஆய்வில், தொழுகைக்கு முன்பாக கை, கால்களை சுத்தப்படுத்தும் ஒசுகானாவின் நடுவே சிவலிங்கம் இருப்பதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. இதையடுத்து, சிவலிங்கம் இருப்பதாகக் கூறப்படும் மசூதியின் ஒரு பகுதி நீதிமன்ற உத்தரவின்படி கையகப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. இந்த உத்தரவை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டுள்ளது. ஒசுகானாவில் உள்ள சிவலிங்கத்தை அளக்கவும், அதை சுற்றியுள்ள சுவரை உடைக்கவும் இந்துக்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஞானவாபி மசூதி வழக்கில் வீடியோ ஆய்வுக்கு உத்தரவிட்ட நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.


ஞானவாபி மசூதி வழக்கில் கருத்து தெரிவித்த பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபூர் சர்மா தெரிவித்த கருத்து உலகளவில் கண்டனங்களைப் பெற்றுள்ளது. இதனால், அல்குவைதா தீவிரவாத அமைப்பு இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம் என்று மிரட்டல் விடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. டெல்லி, மும்பை, குஜராத், உத்தரப் பிரதேச நகரங்களில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்படும் என்று அல்குவைதா எச்சரித்துள்ளது. இந்தியாவுக்கு இஸ்லாமிய நாடுகள் பல தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்தன. 


இந்த வழக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பை இரு பிரிவினரும் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.