ஞானவாபி மசூதி விவகாரத்தில் இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட வாரணாசி நீதிமன்றம் இது தொடர்பான தீர்ப்பை தள்ளி வைத்திருந்தது. ஞானவாபி மசூதி வழக்கு கடந்த மே மாதம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆய்வு ஆணையர் விஷால் சிங் (Vishal Singh)  தலைமையில் ஞானவாபி (Gyanvapi Masjid) மசூதியில் மேற்கொள்ளப்பட்ட வீடியோ பதிவு தொடர்பான முதற்கட்ட அறிக்கையை மூடி சீல் வைக்கப்பட்ட கவரில் வைத்து வாரணாசி நீதிமன்றத்தில் ஆய்வுக் குழு சமர்ப்பித்தது. இந்த அறிக்கை 10 முதல் 12 பக்கங்கள் கொண்டது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை இன்று நீதிமன்றம் அளிக்க உள்ளது. 


 






வழக்கு பின்னணி:


உத்தரப் பிரதேசம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் ஞானவாபி மசூதி அமைந்துள்ளது.  இந்த மசூதி, கோயிலை இடித்து முகலாய பேரரசர் அவுரங்கசீப்பால் கட்டப்பட்டதாக புகார் கூறப்படுகிறது. மேலும், மசூதி சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை தினசரி தரிசிக்க உத்தரவிடக் கோரிய வழக்கும் உள்ளது. வாரணாசியை சேர்ந்த இந்துப் பெண்கள் 5 பேர் சேர்ந்து இந்த வழக்கைத் தொடர்ந்தனர்.


இந்த வழக்கில், வாரணாசி சிவில் நீதிமன்ற நீதிபதி ரவி குமார் திவாகர்  3 நாட்கள் கள ஆய்வு மற்றும் ஆய்வு முழுமையாக வீடியோ பதிவும் செய்யப்பட வேண்டும் என்று உத்திரவிட்டார்,. அதன்படி, ஞானவாபி மசூதிக்குள் கள ஆய்வு நடைபெற்றது.


கள ஆய்வில், தொழுகைக்கு முன்பாக கை, கால்களை சுத்தப்படுத்தும் ஒசுகானாவின் நடுவே சிவலிங்கம் இருப்பதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. இதையடுத்து, சிவலிங்கம் இருப்பதாகக் கூறப்படும் மசூதியின் ஒரு பகுதி நீதிமன்ற உத்தரவின்படி கையகப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. இந்த உத்தரவை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டுள்ளது. ஒசுகானாவில் உள்ள சிவலிங்கத்தை அளக்கவும், அதை சுற்றியுள்ள சுவரை உடைக்கவும் இந்துக்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஞானவாபி மசூதி வழக்கில் வீடியோ ஆய்வுக்கு உத்தரவிட்ட நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.


ஞானவாபி மசூதி வழக்கில் கருத்து தெரிவித்த பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபூர் சர்மா தெரிவித்த கருத்து உலகளவில் கண்டனங்களைப் பெற்றுள்ளது. இதனால், அல்குவைதா தீவிரவாத அமைப்பு இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம் என்று மிரட்டல் விடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. டெல்லி, மும்பை, குஜராத், உத்தரப் பிரதேச நகரங்களில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்படும் என்று அல்குவைதா எச்சரித்துள்ளது. இந்தியாவுக்கு இஸ்லாமிய நாடுகள் பல தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்தன. 


இந்த வழக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பை இரு பிரிவினரும் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.