கடந்த 2019ஆம் ஆண்டு, கர்நாடகாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி, லலித் மோடி, நீரவ் மோடி ஆகியோரை மறைமுகமாக விமர்சித்து பேசிய ராகுல் காந்தி, "எப்படி, திருடர்கள் அனைவருக்கும் மோடி என பெயர் சூட்டுகிறார்கள்?" என கேள்வி எழுப்பியிருந்தார்.


ராகுல் காந்தி தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு:


ராகுல் காந்தியின் இந்த பேச்சு, அவதூறு கிளப்பும் வகையில் இருப்பதாக வழக்கு தொடரப்பட்டது. அதன் தீர்ப்பு சமீபத்தில் வழங்கப்பட்டது. அதில், அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது சூரத் நீதிமன்றம். இதன் காரணமாக, மக்களவை உறுப்பினராக ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.


இந்த சூழலில், தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி ராகுல் காந்தி தொடர்ந்த வழக்கை சூரத் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதையடுத்து, சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக குஜராத் உயர் நீதிமன்றத்தில்  ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கின் தீர்ப்பு நாளை அறிவிக்கப்பட உள்ளது.


தீர்ப்பின் விளைவுகள் என்ன?


ராகுல் காந்தி மீதான தண்டனைக்கு நீதிமன்றம் தடை விதித்தால், அவரது தகுதி நீக்கம் ரத்து செய்யப்படலாம். அவரது தகுதி நீக்கத்திற்கு தடை விதிக்கப்படவில்லை என்றால், ராகுல் காந்தி குஜராத் உயர் நீதிமன்றத்தின் அதிக நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வு முன் மேல்முறையீடு செய்யலாம்.


அவதூறு வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் ராகுல் காந்தியால், 8 ஆண்டுகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினராக முடியாது. கடந்த 2013ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினராக பதவி நீக்கம் செய்யப்பட்டார். எந்தவொரு எம்.பியோ அல்லது எம்.எல்.ஏ.வோ குற்றம் நிரூபிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டால் தானாகவே தகுதி நீக்கம் செய்யப்படுவார் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.


இந்த வழக்கில் தொடர் பின்னடைவுகளை சந்தித்து வரும் ராகுல் காந்திக்கு நாளை நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


இதேபோன்று, பாட்னா நீதிமன்றத்திலும் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு பாட்னா நீதிமன்றம் சமீபத்தில் சம்மன் அனுப்பியது. அந்த சம்மனை ரத்து செய்யக் கோரி ராகுல் காந்தி பாட்னா உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளார்.


தகுதி நீக்கம் செய்யப்பட்ட காரணத்தால், எம்பிக்களுக்கு வழங்கப்படும் அரசு பங்களாவில் இருந்து கடந்த ஏப்ரல் 22ஆம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என மக்களவை செயலகம் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி, டெல்லியில் உள்ள அரசு பங்களாவை காலி செய்து, அதை மக்களவை செயலகத்திடம் ராகுல் காந்தி ஒப்படைத்தார்.