இந்தியாவின் ஒல்லி யானை என்று அறியப்பட்ட லஷ்மிக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. பீட்டா (PETA) வின் முயற்சியால் லக்‌ஷ்மியை உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள ஈசிசிசி Wildlife SOS Elephant Conservation and Care Centre (ECCC) என்ற மையத்தில் வைத்துப் பராமரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


விலங்குகளை நன்முறையில் நடத்த விழைகின்ற மக்கள் (People for the Ethical Treatment of Animals) அல்லது பீட்டா, ஐக்கிய அமெரிக்க நாட்டில் வர்ஜீனியா மாநிலத்து நோர்போக் நகரில் விலங்கு வதைகளைத் தடுக்குமாறு உருவான தன்னார்வல அமைப்பாகும்.


இந்த அமைப்பு தொடர்ச்சியாக மூன்று வாரங்களாக லஷ்மியின் நிலவரத்தை எடுத்துக் கூறி அதற்கு நிரந்தரமான புகலிடம் கிடைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. அதன் விளைவாக லஷ்மிக்கு நிரந்தர இடம் கிடைத்துவிட்டது. லஷ்மி பிச்சையெடுக்கப் பயன்படுத்தப்பட்டு வந்தது. பீட்டா மற்றும் உள்ளூர் வனவிலங்கு ஆர்வலர்களின் முயற்சியால் அதனை மத்தியப் பிரதேச வனத்துறையினர் மீட்டனர். பின்னர் அதற்கு கால்நடை மருத்துவர்கள் அவசர சிகிச்சையை வழங்கினர்.




லஷ்மி மீட்கப்பட்டபோது அது நாள்பட்ட ஆர்திரிட்டிஸ், மூட்டு சிதைவு ஆகியனவற்றால் பாதிக்கப்பட்டிருந்தது. அதன் இடுப்புப் பகுதி பாதிக்கப்பட்டிருந்தது. சரியான உணவும், தண்ணீரும் இல்லாததால் லஷ்மி சொல்லனாத் துயரில் இருந்தது. இந்நிலையில் டிசம்பர் முதல் வாரத்தில் பீட்டா இந்தியா மற்றும் உள்ளூர் செயற்பாட்டாளர்கள் முயற்சியால் லஷ்மியை தனது பிடியில் வைத்திருந்த நபர் மீது  நடவடிக்கை எடுக்கப்பட்டது. வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டம் 1972ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


பீட்டா இந்தியா லக்‌ஷ்மியை பற்றிய செய்தியை ஊடக வெளிச்சத்துக்கு கொண்டுவந்த நிலையில், மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ப்ராஜக்ட் எலிஃபண்ட் பிரிவு மற்றும் இந்திய வன விலங்குகள் நல வாரியம் ஆகியன லக்‌ஷ்மியின் மறுவாழ்வை உறுதி செய்யுமாறு வனத்துறைக்கு உத்தரவிட்டது.






லஷ்மிக்கு அளிக்கப்பட்ட முதலுதவி:


லக்‌ஷ்மியை மீட்டவுடன் அதை நிற்கவைக்க ஒரு மணல் மேடு அமைக்கப்பட்டது. அதன் கால்கள், இடுப்பு பலவீனமாக இருந்ததால் இவ்வாறாக செய்யப்பட்டது. தலை மற்றும் தும்பிக்கையை வைத்துக் கொள்ள மூங்கிலால் ஆன ஸ்டாண்ட் அமைக்கப்பட்டது. தினமும் ரத்த ஓட்டத்தை சீர் செய்ய மசாஜ் அளிக்கப்பட்டது. புண்களுக்கு மருந்திடப்பட்டது. மூட்டு வலியைக் குறைக்கவும் மாத்திரைகள் வழங்கப்பட்டது. அதன் கால்கள், நகங்களில் ஈரப்பதத்தை உறுதி செய்ய மாய்ஸ்சரைசர் வழங்கப்படுகிறது. உணவுக்காக பழங்கள் வழங்கப்படுகிறது.