நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களுடன் மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆலோசனை நடத்தவுள்ளார்.


நாடாளுமன்றத்தின் இரு அவைகளைச் சார்ந்த அனைத்துக் கட்சிகளிடையேயான கூட்டமானது,  வரும் ஜூலை 21 -ம் தேதி காலை 11 மணிக்கு புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதானக் குழு அறையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் 22 ஜூலை 2024 அன்று தொடங்கி ஆகஸ்ட் 12 ஆம் தேதி நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பட்ஜெட் தயாரிக்கும் பணி:


மத்திய பட்ஜெட் 2024-க்கான பட்ஜெட் தயாரிப்பு செயல்முறையின் இறுதி கட்டத்தைக் குறிக்கும் அல்வா விழாவானது, இன்று மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் நார்த் பிளாக்கில் நடைபெற்றது. 


ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கலாவதற்கு 9 அல்லது 10 நாட்களுக்கு முன்பு மத்திய நிதி அமைச்சகத்தால் அல்வா விழா நடத்தப்படுகிறது. அந்த வகையில் இன்று அல்வா விழா நடைபெற்றது.






அனைத்துக் கட்சி கூட்டம்:


2024- 2025ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் வரும் ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்யபடுகிறது. இதற்கான நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஜூலை 22 ஆம் தேதி தொடங்க உள்ளது. பிரதமர் மோடி தலையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 3வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளநிலையில் இந்த பட்ஜெட் தாக்கல் செயய்ப்பட உள்ளது. இதனால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.


இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து, அனைத்து கட்சிகளுடன் கூட்டம் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான ஆலோசனைக் கூட்டமானது வரும் ஜூலை 21 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.