55 பணிகளை விமானத்தில் ஏற்றாமல் சென்றதற்காக  கோ ஃபர்ஸ்ட் ஏர்லைன் ( Go First airline) நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதமாக செலுத்த வேண்டும் என்று விமான போக்குவரத்து தலைமை இயக்குநரகம் ( Directorate General of Civil Aviation (DGCA)) உத்தரவிட்டுள்ளது.


பெங்களூருவில் இருந்து புது டெல்லிக்கு   சென்ற G8-116  என்ற விமானம் கெம்பகெளடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து (Kempegowda International Airport)  காலை 6.30மணிக்கு புறப்பட்டது. ஆனால் இந்த விமானம் போர்ட்டிங் பாஸ்களுடன் காத்திருந்த 55 பயணிகள் இல்லாமல் அவர்களின் உடைமைகளுடன் புறப்பட்டு சென்றது. இது கடந்த ஜனவரி 9 ஆம் தேதி நடந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதனால் விமான நிலையத்திலேயே காத்திருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். விமான நிறுவனத்தில் அலட்சியம், கவனக்குறைவை குறிப்பிட்டு பலரும் தங்களது சமூக வலைதள  பக்கத்தில் புகார்களை தெரிவித்தனர். விமான நிறுவனத்தின் செயலை கண்டித்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.


அபராதம்: 


பயணிகளை சிரமத்திற்கு உள்ளாகியதற்காகவும், போதிய ஏற்பாடுகளை செய்ய தவறியதற்காகவும் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


வருத்தம் அளிப்பதாக கோ ஃப்ர்ஸ்ட் நிறுவனம் மன்னிப்பு கடிதம்: 


55 பயணிகளை ஏற்றாமல் விட்டு சென்றதற்காக கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிக்கவும் என தெரிவித்துள்ளது.  மேலும் 55 பயணிகள் வேறு விமானம் மூலம் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பயணிகளுக்கு அடுத்த 12 மாதங்களில் உள்நாட்டு விமான பயண டிக்கெட்டை இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டது.


இந்த சம்பவம் தொடர்பாக எங்கள் தரப்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. உரிய விசாரணை நடத்தப்படும் வரை சம்பந்தப்பட்ட ஊழியர்கள் வேலைக்கு வர அனுமதிக்கப்படவில்லை என கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


டிஜிசிஏ நோட்டீஸ்


இதனை அடுத்து, கவனக் குறைவாக இருந்த கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனத்திற்கு விமான போக்குவரத்து தலைமை இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. முறையான தகவல் தொடர்பு, ஒருங்கிணைப்பு உள்ளிட்டவை இல்லாததால் இச்சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தது.  இதில் பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளது.


மேலும், தங்களின் கடமைகளில் இருந்து தவறியதற்காக கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனத்தின் பொறுப்பு மேலாளர் மற்றும் தலைமை செயல்பாட்டு அதிகாரி மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது? என இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும். உரிய பதில்களுக்கு பின், நடவடிக்கை எடுக்கப்படும் என விமான போக்குவரத்து தலைமை இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.