இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை மிகப்பெரும் பாதிப்பினை மக்களுக்கு ஏற்படுத்திவருகிறது. இதிலிருந்து எப்படியாவது மக்களை காக்கவேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர பணிகளில் ஈடுபட்டுவரும் நிலையில், நேற்று மட்டும் 2 லட்சத்து 59 ஆயிரத்து 170 பேர் கொரோனா தொற்றினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதோடு ஒரே நாளில் அதிகபட்சமாக 1761 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றிற்கு மக்கள் பாதிப்படையும் நிலையில் மக்கள் இதற்காக பெரும் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும், வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக்கொள்வதோடு 9 வழிமுறைகளை பின்பற்றவேண்டும் என இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் ஜெயலால் தெரிவித்துள்ளார். 


படி 1: ஒவ்வொருவருக்கு கொரோனா தொற்று அறிகுறிகளான காய்ச்சல், தலைவலி, தொண்டை கரகரப்பு, சுவை மற்றும் வாசனையின்மை இருந்தால் அவர்கள் உடனடியாக முதலில் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். குடும்பத்தினரோடு பழகுவதை தவிர்த்துவிட்டு ஓய்வெடுப்பதோடு இரவில் நன்றாக தூங்கவேண்டும். இந்த காலகட்டத்தில் மருத்துவர்கள் அல்லாத வேறு யாரிடமும் ஆலோசனைகளை கேட்பதை தவிர்க்கவேண்டும்.


படி 2: இதற்கு அடுத்ததாக, அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு சென்று கொரோனா பரிசோதனை( RT-PCR test) செய்துகொள்ள வேண்டும். இதன் முடிவு வரும்வரை வீட்டின் தனி அறையில் தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கவேண்டும். முடிந்தவரை தனியாக கழிப்பறை வசதிகள் இருப்பதையும் உறுதி செய்துகொள்ள வேண்டும். இதோடு பயன்படுத்தும் துணிகள் மற்றும் பாத்திரங்களை தனியாக வைத்து சுத்தம் செய்துகொள்ள வேண்டும். குடும்ப உறுப்பினர்களை ஒருவேளை சந்திக்கவேண்டிய நிலை ஏற்பட்டால், முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்யவேண்டும்.


மேலும் தனிமைப்படுத்துதலில் உள்ள போது, நல்ல சத்தான உணவுப்பொருள்கள் மற்றம் அதிகளவு தண்ணீரினை உட்கொள்ள வேண்டும். நல்ல தூக்கம் இந்த நேரத்தில் அவசியமான ஒன்று.


படி 3: கொரோனா பாசிட்டிவாக இருக்கும் பட்சத்தில், அதற்கு அடுத்ததாக,  ESR, CRP, TC, DC, Ferritin, D-Dime போன்ற அடிப்படை சோதனைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் வேறு ஏதேனும் வழக்கமான நோய்களுக்கு மருந்தினை உட்கொண்டால் அதனை கண்டிப்பாக தொடர வேண்டும். இதோடு குடும்ப உறுப்பினர்களையும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.


படி 4: கொரோனாவின் அறிகுறிகள் லேசானதாக இருப்பின், வீட்டு தனிமையில் இருந்து தங்களை பராமரித்துக்கொள்ளலாம். இருப்பினும் சுகாதார நிபுணர்களுடன் தொடர்புகொண்டு உடல் நிலை குறித்த மருத்துவ ஆலோசனைகளை பின்பற்றிக்கொள்ள வேண்டும்.


படி 5: வீட்டு தனிமையில் இருப்பவர்கள் தினமும் வழக்கமான உடற்பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் உடல் வலி மற்றும் சோர்வினை  உணர்ந்தால் உடற்பயிற்சி செய்வதைத்  தவிர்க்கலாம். ஆனால் எப்போதும் சுவாச பயிற்சியினை தவறாமல் மேற்கொள்ளவேண்டும். இதோடு வீட்டில் ஆக்சிஜன் அளவினை ஆக்சிமீட்டர் உதவியோடு சோதனை செய்துகொள்ளவேண்டும். இதன் அளவு 95 சதவீதத்திற்கு கீழ் சென்றால் மூச்சுத்திணறல் ஏற்படக்கூடிய நிலை ஏற்படும். எனவே உடனடியாக மருத்துவமனையின் உதவியினை நாட வேண்டும்.


படி 6: வீட்டில் உடற்பயிற்சி செய்வதைத்தவிர, நாடித்துடிப்பு, உடலின் வெப்பநிலையின் அளவு, ஆக்சிஜன் செறிவு மற்றும் இரத்த அழுத்தத்தை எட்டு மணி நேரத்திற்கு ஒருமுறை சரிபார்க்க வேண்டும். மேலும் நீரழிவு நோய் இருக்கும் பட்சத்தில், ஒரு நாளைக்கு இரண்டு முறை இரத்த அழுத்தத்தினை சரிபார்த்து, எப்பொழுதும் உட்கொள்ளும் மருந்தினை எடுத்துக்கொள்ள வேண்டும். இதோடு தினமும் 8 மணி நேர தூக்கத்தினை உறுதிசெய்வதோடு, 2 மணி நேரம் prone position sleep-ஐ மேற்கொள்ள வேண்டும்.


படி 7 : உங்களது நாடித்துடிப்பு தொடர்ந்து 100 சதவீதத்திற்கு அதிகமாகவும், வெப்பநிலை 100-க்கு மேல் மூன்று நாட்களுக்கு மேல் இருப்பதை உணர்ந்தால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். இந்த அறிகுறியோடு கடுமையான தலைவலி அல்லது தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு இருந்தாலும் உடனடியாக மருத்துவர்களின் உதவியினை நாட வேண்டும். 


படி 8: மருத்துவரின் ஆலோசனைகளைப் பெறாமல் ரெம்டெசிவிர் மருந்தினை உட்கொள்வதை தவிர்க்கவேண்டும். கொரோனா நோயாளிகளில் 10-15 சதவீதம் பேருக்கு மட்டுமே இந்த மருந்து தேவைப்படும் பட்சத்தில் மருத்துவர்களின் ஆலோசனையை நிச்சயம் பெறவேண்டும்.


படி 9 : கொரோனா அறிகுறி தென்பட்ட முதல் நாளிலே அனைத்து அடிப்படை சோதனைகளையும் செய்த பின்பாக, மீண்டும் 5-வது நாளில் மேற்கொள்ளவேண்டும். கொரோனா நெகட்டிவ் என்று வரும்வரை தொடர்ந்து வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.


இதுபோன்ற வீட்டு தனிமையில் இருப்பவர்கள் தங்களை தானே சோதித்துக்கொண்டு, உடலினை பராமரிக்கும் பட்சத்தில் கொரோனா நோயினை கண்டு அதீத அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.