பாஜக முதல்வர்களின் பெயர்கள் துணை முதல்வர்களின் பெயர்களை கீழே தள்ளி அண்ணாமலை பெயர் முன்னே குறிப்பிட்டுள்ளார்கள். இன்னும் எத்தனை பேர் கீழே தள்ளப்படுவார்கள் என்று தெரியவில்லை என்று காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார்.


கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளுக்கு மே 10ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக, காங்கிரஸ், ஜனதா தளம் ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ளன. தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ள நிலையில், தேர்தல் நட்சத்திர பிரச்சார தலைவர்கள் பட்டியலை பாஜக தலைமை வெளியிட்டுள்ளது.  அந்த பட்டியலில் பிரதமர் மோடி, ஜே.பி.நட்டா, ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின் கட்கரி, எடியூரப்பா, நலின் குமார் கடீல், பசவராஜ் பொம்மை, ப்ரஹலாத் ஜோஷி, சதானந்த கவுடா, ஈஸ்வரப்பா, கோவிந்த் கர்ஜோல், நிர்மலா சீதாராமன், ஸ்மிரிதி ராணி, தர்மேந்திர பிரதான், மன்சுக் பாய் மண்டாவியா ஆகியோருடன் 18வது பெயராக தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.






அண்ணாமலைக்கு அடுத்ததாக, அருண் சிங், சி.டி  ரவி, உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், அஸ்ஸாம் முதலமைச்சர் ஹேமந்த் பிஸ்வ சர்மா, மகாராஷ்டிர துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரது பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது.


இதனை முன்னாள் பாஜக நிர்வாகியும், நடிகையுமான காயத்ரி ரகுராம் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பதிவிட்டுள்ள அவர், பட்டியலில் பாஜக முதல்வர்களின் பெயர்களையும், பாஜக துணை முதல்வர்கள் பெயர்களையும் கீழே தள்ளி.. கன்னடிகா அப்பா பட்டியலில் இருந்து அவரது பெயரை நீக்கி, தத்தெடுத்த வாரிசு கன்னடிகா மகனுக்காக அவரது பெயருக்கு பதிலாக மகனின் பெயரை பட்டியலில் மேல தள்ளி.. என்ன ஒரு சூப்பர் பாசமலர் தருணம். வாழ்த்துக்கள் அப்பா. இன்னும் எத்தனை பேர் கீழே தள்ளப்படுவார்கள் என்று தெரியவில்லை. பாஜக தலைவர்களே உஷார். பாஜக தலைவர்கள், முதல்வர்கள், துணை முதல்வர்கள் அனைவருக்கும் இது எவ்வளவு அவமானம்?” என்று கூறியுள்ளார்.


கர்நாடகாவில் அண்ணாமலைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு தாங்கள் பின்வரிசையில் அமரவைக்கப்பட்டதாக, பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷட்டர் வருத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.