சர்க்கரை நோயாளிகள் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்வது அவசியம். அதனை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.இல்லாவிட்டால் அது இதய நோய், சிறுநீரக பாதிப்பு, நரம்புகள் பாதிப்பு, கண் பார்வை பாதிப்பு எனப் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். லவ்நீத் பத்ரா என்ற ஊட்டச்சத்து நிபுணர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதற்காக 4 எளிய வழிமுறைகளைச் சொல்கிறார். 


சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோய் உலகம் முழுவதும் வளர்ந்து வரும் நோயாக இருக்கிறது. மேலும், பலரின் உணவுப் பழக்கம், மன அழுத்தம் முதலானவற்றின் காரணமாக நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 40 வயதுக்கு மேற்பட்டோரிடம் அதிகம் காணப்பட்ட நீரிழிவு நோய் தற்போது அனைத்து வயதினரிடையிலும் பரவும் அபாயம் பெருகியுள்ளது. 


இந்தியாவில் தற்போது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 77 மில்லியனாகவும், உலகளவில் இரண்டாம் இடத்தில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. உடலில் இன்சுலின் சுரப்பி தேவையான அளவு சுரக்கவில்லை என்றாலோ, சுரந்த இன்சுலின் சரிவரப் பயன்படுத்தப்படவில்லை என்றாலோ, நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இது இரண்டு வகைகளாக உள்ளது. முதல் வகையில், உடலின் இன்சுலின் சுரக்காமல் இருப்பது ஏற்படுகிறது. இரண்டாம் வகையில், சுரக்கப்பட்ட இன்சுலின் உடலுக்குப் பயன்படாம இருப்பது ஏற்படுகிறது. 


நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது சற்றே கடினம் என்ற போது, அதனைக் கட்டுப்படுத்தாமல் விடுவது இதய நோய், சிறுநீரக நோய்கள் முதலானவற்றை ஏற்படுத்தும் மேலும், நீரிழிவு நோய் தொடர்பான பொய்கள் உலகம் முழுவதும் பரப்பப்படுவதால் அவற்றை எதிர்கொள்வது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது


அதனால், ஊட்டச்சத்து நிபுணர் லவ்நீத் பத்ரா அறிவுரைகளை பின்பற்றுவோமாக.


சீமை சாமந்தி தேநீர்:


மூலிகை செடி வகையைச் சார்ந்த இந்தப் பூவின் இதழைக் கொண்டு தயாரிக்கப்படும் தேநீரை அருந்துவதன் மூலம் உடல் குளிர்ச்சி, தொண்டை வலி, சளி பிரச்சனைகள் மற்றும் ஜுரம் ஆகியவை குணமாகிறது. ஒரு கிளாஸ் கொதிக்கும் தண்ணீரில் அரைப்படி அளவிற்கு இந்த பூவை இட்டு அதனுடன் சிறிது மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க விடவும் பின்னர் இந்த தேநீரை வடிகட்டி பருகவும். தூங்குவதற்கு முன்னர் ஒரு கோப்பை சீமை சாமந்தி தேநீர் அருந்தினால் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும். இதில் ஆன்ட்டி ஆக்சிடன்ட் பண்புகள் கொண்டது.


நீரில் ஊறவைத்த பாதாம்:


பாதாம் அதிக சத்து நிறைந்த உலர் கொட்டை வகையைச் சேர்ந்தது. அன்றாடம் தூங்கும் முன்னர் 7 பாதாம்களை சாப்பிடுவது நல்லது. பாதாமில் மெக்னீஸியம் மற்றும் ட்ரிப்டோபேன் இருக்கிறது. இது தூக்கத்தை தூண்டும். மேலும் இதை சாப்பிடுவதால் உங்கள் வயிறு நிறைந்துவிடும். அதனால் வேறு ஏதேனும் சாப்பிடும் ஆவல் ஏற்படாது.


ஊறவைத்த வெந்தயம்:


வெந்தயத்தில் நிறைய மருத்துவக் குணம் அதிகம். அதில் ஹைப்போக்ளைசிமிக் குணநலன்கள் உள்ளது. இரவு உறங்கும் முன்னர் ஊற வைத்த வெந்தயத்தை உண்டு படுத்தால் அது ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ளும்.


வஜ்ராசனா:


ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள வஜ்ராசனா செய்யலாம். இது ரத்த சுழற்சியையும் சீராக வைத்துக் கொள்ளும்.


சமச்சீரான உணவு, முறையான உடற்பயிற்சி, எடையைப் பேணுதல், புகை, மதுவை தவிர்த்தல், மன அழுத்தத்தை குறைத்தல், தேவையான அளவு தூங்குவது ஆகியன ரத்த சர்க்கரை அளவைப் பேண அவசியம்.