உத்தரப் பிரதேசம், கிரேட்டர் நொய்டாவில் ஒரு வாரத்திற்கும் மேலாக தங்கள் வீட்டிற்கு வெளியே படிக்கட்டுகளில் வசித்து வந்த வயதான தம்பதியினர் இறுதியாக நேற்று இரவு வீட்டிற்குள் சென்றனர். ஒரு வார காலமாக சிக்கித் தவித்து வந்த அவர்களின் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.


முன்னதாக, அனைத்து உடைமைகளுடன் தங்கள் வீட்டின் முன் படிக்கட்டுகளில் வசிக்க வேண்டிய கட்டாயத்துக்கு அவர்கள் தள்ளப்பட்டனர். சுனில் குமார் - ராக்கி குப்தா தம்பதிக்கு கிரேட்டர் நொய்டாவின் செக்டார் 16B இல் உள்ள ஸ்ரீ ராதா ஸ்கை கார்டன் சொசைட்டியில் 15ஆவது மாடியில் ஒரு பிளாட் சொந்தமாக உள்ளது.


 






ஆனால், வாடகைதாரரான ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட சண்டையின் காரணமாக அவர்களால் வீட்டுக்குள் நுழைய முடியவில்லை. ஒரு மாதத்துக்கு முன்பு வாடகை ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டதாகவும், ஆனால் அந்த பெண் தங்களை தங்கள் சொந்த வீட்டிற்குள் நுழைய விடவில்லை என்றும் தம்பதியினர் தனியார் தொலைகாட்சிக்கு பேட்டி அளித்தனர்.


இறுதியாக, தங்களது சொத்துக்களைப் பெற்று கொண்ட பிறகு, வயதான தம்பதி மகிழ்ச்சி தெரிவித்தனர். மகிழ்ச்சியில், அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதாக அண்டை வீட்டார் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


இருப்பினும், குத்தகைதாரர் வீட்டில் இருந்து தனது உடைமைகளை அகற்றாமல் மேலும் ஒரு நாள் அவகாசம் கேட்டுள்ளார். அவரது கோரிக்கைக்கு தம்பதிகள் சம்மதித்துள்ளனர். இதற்கிடையில், தங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என குப்தா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


இதுகுறித்து தனியார் தொலைக்காட்சியிடம் விரிவாக பேசியுள்ள தம்பதியினர், "குடியிருப்பை காலி செய்வதாக குத்தகைதாரர் உறுதியளித்தார். ஆனால் அவர் தனது வாக்குறுதியை நிறைவேற்றுவாரா எனக் காத்திருக்கிறேன்" என்றார்.


தனது மோசமான அனுபவங்களை பகிர்ந்த கொண்ட போது, குப்தா பல முறை மனம் உடைந்து அழுதார். "ஜூலை 2021இல் எம்.எஸ். ப்ரீத்திக்கு எங்கள் ஃப்ளாட்டை குத்தகைக்கு கொடுத்தோம். லீஸின் காலம் 11 மாதங்கள். அது கடந்த மாதத்துடன் முடிவடைந்தது. மேலும் நாங்கள் இங்கு மாற வேண்டியிருந்ததால் குடியிருப்பை காலி செய்யுமாறு இரண்டு மாதங்களுக்கு முன்பு அவரிடம் தெரிவித்தோம். 


ஆனால், அவர் அதற்கு பதில் அளிக்கவே இல்லை. வீட்டை காலி செய்யாமல் அதை தாமதப்படுத்திக் கொண்டே இருந்தார்" என தம்பதியினர் தெரிவித்தனர். மும்பையில் உள்ள பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த குமார், இந்தாண்டு மார்ச் மாதம் ஓய்வு பெற்றார். 


குத்தகைதாரர் உறுதிமொழி அளித்ததன் பேரில் அவர்கள் மும்பையிலிருந்து கிரேட்டர் நொய்டாவுக்கு குடிபெயர்ந்தனர். கிரேட்டர் நொய்டாவுக்கு வந்த பிறகு, அந்தப் பெண் குடியிருப்பை காலி செய்து விடுவார் என்று நம்பிய தம்பதியினர் உறவினர் வீட்டில் தங்கினர். தம்பதியினர் காவல் துறையை அணுகியபோது, அவர்கள் இது சிவில் விவகாரம் என்று கூறி நீதிமன்றத்தை அணுகுமாறு கேட்டுக் கொண்டனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண