School Holiday:  புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் மாவட்ட பள்ளிகளுக்கு டிசம்பர் 4ஆம் தேதி விடுமுறை அறிவித்தது கல்வித்துறை. 


புயல் எச்சரிக்கை:


நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய   ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 05.30 மணி அளவில்  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இன்று காலை 08.30 மணி அளவில் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 760 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு  கிழக்கு-தென்கிழக்கே சுமார் 780 கிலோமீட்டர் தொலைவிலும்,  பாபட்லாவிற்கு (ஆந்திரா) தென்கிழக்கே சுமார் 960  கிலோமீட்டர் தொலைவிலும், மசூலிபட்டினத்திற்கு (ஆந்திரா) தென்கிழக்கே சுமார் 940  கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.


இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 02-12-2023 வாக்கில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற பிறகு டிசம்பர் 3ஆம் தேதி புயலமாக மாறுகிறது. வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா, அதனை ஒட்டிய வட தமிழ்நாட்டில் கடற்கரை பகுதியை டிசம்பர் 4ஆம் தேதி புயல் நெருங்கும். பின்னர், நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே டிசம்பர் 5ஆம் தேதி புயல் கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.


பள்ளிகளுக்கு விடுமுறை:


இதனால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.  முன்னதாக, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியால் தொடர்ச்சியாக மழை பெய்துகொண்டே இருந்தது. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனை தொடர்ந்து புதுச்சேரியிலும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தற்போது புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் மாவட்ட பள்ளிகளுக்கு டிசம்பர் 4ஆம் தேதி (திங்கள் கிழமை) விடுமுறை அறிவித்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 


வானிலை முன்னெச்சரிக்கை என்னென்ன?


02.12.2023: தமிழகத்தில் அநேக இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 


03.12.2023: தமிழகத்தில் அநேக இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை மாவட்டங்கள்  மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


04.12.2023: தமிழகத்தில் அநேக இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.