இயக்குநர் வினோத் கப்ரி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ இந்தியா முழுவதுமே வைரலானது. ராணுவத்துக்கு செல்ல வேண்டும் என்ற வேட்கை கொண்ட 19 வயதான இளைஞர் ஒருவர் தினமும் தன் வேலையை முடித்துவிட்டு இரவு 10கிமீ ஓடியே வீட்டுக்குச் செல்கிறார். தனக்கு பயிற்சி எடுக்க நேரம் இல்லை என்பதால் இப்படி வேலையை முடித்துவிட்டு ஓடுவதாக குறிப்பிட்டார் அந்த இளைஞர். வேலைக்கு நடுவே கனவைத் துரத்தும் அந்த இளைஞரான பிரதீப் இந்தியா முழுவதும் வைரலானார். சோஷியல் மீடியா அவரை கொண்டாடியது. மீடியாக்கள் அந்த இளைஞரின் வீட்டைத் தேடியது. பலரும் நேர்காணலுக்காக அலைந்தனர். இந்த நேரத்தில் அந்த இளைஞர் கூறி இருக்கும் வார்த்தைகள் அனைவரையும் மேலும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

தொந்தரவு வேண்டாம்...

இணையத்தில் ஹிட்டான பிரதீப் மெஹ்ரா தன்னை தனியாக விடும்படி மீடியாவிடமும், சோஷியல் மீடியா உலகத்திடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இது குறித்து தெரிவித்துள்ள அந்த இளைஞர், '' நான் மீடியாக்களின் நேர்காணல்களால் தொல்லைக்கு ஆளாகியுள்ளேன். நான் இப்போதுதான் சில அடிகள் எடுத்து வைத்துள்ளேன்.  அதற்கே பாராட்டுகள் குவிகின்றன. இது என்னுடைய கவனத்தை சிதறடிக்கிறது. இலக்கில் கவனம் செலுத்த முடியவில்லை. எனவே மீடியாக்கள் என்னை தனியாக விட வேண்டும். என்னுடைய கடின உழைப்பு சத்தமில்லாமல் இருக்கட்டும். நான் வெற்றி பெற்றதும் கொண்டாடிக்கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளார். 

இயக்குநர் வினோத் கப்ரி வீடியோ எடுக்கும்போதே இந்த வீடியோ வைரலாகும் எனக் குறிப்பிட, அதனால் எனக்கென்ன பயன் என சாதாரணமாக கடந்து ஓடினார் இளைஞர் பிரதீப். இந்நேரத்தில் அவரது பிரைவசி பேச்சும் இணையத்தில் கொண்டாடப்படுகிறது. அவரை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாமென பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

உரையாடல் இதுதான்.. 

“ நள்ளிரவில் காரில் சென்ற வினோத் கப்ரி, ஒரு சிறுவன் ஓடிக்கொண்டிருப்பதை  பார்க்கிறார். அதனைத் தொடர்ந்து அவர்களுக்குள் நடந்த சுவாரஸ்சியமான உரையாடலை இங்கு பார்க்கலாம்.. 

வினோத் அந்தச் சிறுவனிடம்: நான் உன்னை காரில் வீட்டில் கொண்டு விடுகிறேன் 

பிரதீப்: இல்லை வேண்டாம் நான் ஓடியே வீட்டிற்கு செல்கிறேன். 

பிரதீப்: ஒவ்வொரு முறையும் வீட்டிற்கு நான் இப்படித்தான் ஓடுவேன். 

வினோத்: நீ எங்கே வேலை செய்கிறாய்

பிரதீப்: மெக்டோனாலில் வேலை செய்கிறேன்.

வினோத்: என்னுடைய காரில் உன்னை கொண்டு விடுகிறேன்.

பிரதீப்: வேண்டாம் இதை விட்டால் எனக்கு ஓடுவதற்கு நேரம் இல்லை.

வினோத்: சரி நீ எதற்காக ஓடுகிறாய்

பிரதீப்: நான் ராணுவத்தில் சேருவதற்காக..

வினோத்: சரி உன்னுடைய பெயர் 

பிரதீப்: பிரதீப் மெஹ்ரா

வினோத்: நீ எங்கிருந்து வருகிறாய் 

பிரதீப்: உத்தரகாண்ட் அல்மோரோ நகரில் இருந்து வருகிறேன்

வினோத் : ஏன் நீ காலையில் ஓடுவதில்லை.

பிரதீப்: காலையில் சமைத்து விட்டு வேலைக்கு செல்ல வேண்டும் என்பதால் என்னால் காலையில் ஓட முடியாது.

வினோத்: உன்னுடைய வயது என்ன?

பிரதீப்: வயது 19 

வினோத்: உன்னுடைய பெற்றோர்..?

பிரதீப்: எனது அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். எனது சகோதரருடன் நான் தங்கியிருக்கிறேன். 

வினோத்: இந்த வீடியோ வைரல் வீடியோ.

பிரதீப்: யார் என்னை அங்கிகரிக்க போறா 

வினோத்: வைரல் அப்படின்னா என்னனு தெரியுமா?

பிரதீப்: பராவாயில்லை நான் ஏதும் தவறாக சொல்லவில்லையே.. 

வினோத்: சரி எத்தனை கிலோமீட்டர் நீ ஓடி வருகிறாய்..

பிரதீப்: 10 கிலோமீட்டர்.. 

வினோத்: சரி எங்கே சாப்பிடுவாய்

பிரதீப்: நான் வீட்டிற்குச் சென்று சமைத்து சாப்பிடுவேன். 

வினோத்: சரி என்னுடன் வந்து சாப்பிடு வா..  

பிரதீப்:இல்லை என்னுடைய சகோதரர் காத்துக்கொண்டிருப்பான்

வினோத்: உன் சகோதரன் சமைக்க மாட்டாரா?

பிரதீப்: அவன் நைட் டூட்டி பார்க்கிறான்.

வினோத் : நான் உன்னை வீட்ல டிராப் பண்ணுறேனே? 

பிரதீப் : இல்ல அப்படி பண்ணா என் பயிற்சி பாதிக்கப்படும் வேண்டாம்

வினோத்: ஆல்தி பெஸ்ட்