வரும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக ராமநாதபுரத்தில் போடியிடப்போவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. 


இதுகுறித்து தி சண்டெ கார்டியன் பத்திரிக்கையில் பத்திரிகையாளர் அலோக் மேத்தா இந்திய நடப்புகளை வைத்து தமிழகத்தில் பாஜக முன்னெடுக்கும் செயல்பாடுகளை கணித்துள்ளார்.  அதன்படி, எதுவும் நிரந்தரம் இல்லை – எதுவும் நிச்சயிக்கப்பட்டது இல்லை. இந்திய அரசியலிலும் அப்படித்தான். சில சமயங்களில், புகழ்பெற்ற ஜோதிடர்கள் மற்றும் கருத்துக்கணிப்பாளர்கள் கூறும் அனைத்து கணிப்புகளும் தவறாகிவிடும்.


ஜம்மு காஷ்மீரில் இருந்து 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்படும் அல்லது முத்தலாக் அரசால் தடை செய்யப்படும் என்று யார் நினைத்தது அல்லது கணித்தது? சமீபத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் வரலாற்று வெற்றியும் ஆச்சரியமாக இருந்தது, ஏனெனில் 27 ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு, கட்சி 156 இடங்களை வென்றது, பெரும் சாதனை படைத்தது.


இந்த தேர்தலில் காங்கிரஸ் கிட்டத்தட்ட காணாமல் போய்விட்டது. எனவே, 2022 இன் இந்த மாற்றங்கள் 2023-2024 ஆண்டுகளில் பல ஆச்சரியங்களுக்கு வழிவகுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  2022 ஆம் ஆண்டில், கோவா, உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், உத்தரப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், குஜராத் மற்றும் டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் (எம்சிடி) தேர்தல்கள் நடந்தன. இந்த தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சியின் ஆதிக்கம் தொடர்ந்தது. கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர், உத்தரபிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய 5 மாநிலங்களில் பா.ஜ.க வெற்றி பெற்றது, அதே நேரத்தில் காங்கிரஸ் ஒரே ஒரு மாநிலமான ஹிமாச்சல பிரதேசத்தில் வெற்றி பெற்றது. காங்கிரஸை வீழ்த்தி ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று பஞ்சாபில் மிகப்பெரிய சாதனையை படைத்தது. 


2023ஆம் ஆண்டில் மேகாலயா, திரிபுரா மற்றும் நாகாலாந்து பிப்ரவரியில் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மே மாதம் கர்நாடகா மற்றும் சத்தீஸ்கர், நவம்பர் மாதம் மத்திய பிரதேசம், மிசோரம், தெலுங்கானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றில், கர்நாடகா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் முந்தைய தேர்தல்களில் பாஜக சிறிய அளவிலான வித்தியாசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது. சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.  


இந்தியாவில் தென் மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சி அமைக்க முடியவில்லை என்பது நிதர்சனம். ஆனால் மோடி நினைத்தால் எதுவும் சாத்தியமாகும் என கூறுகின்றனர், அவரது தொண்டர்கள். தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஏற்கனவே தமிழகத்தில் பெரிய அளவிலான மாற்றம் வரும் என்ற நம்பிக்கையை அக்கட்சியின் தொண்டர்களுக்கு அளித்து வருகிறார். தென் மாநில தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி கலந்துக்கொண்டால் பெரிய அளவு திருப்பம் ஏற்படும் எனத் தெரிவித்தார்.


காசித் தமிழ்ச் சங்கம் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ”வட இந்தியாவுக்கு காசி தளமாக இருந்தால், தமிழகத்திற்கு ராமேஷ்வரம் உள்ளது” என்றார்.


இதன் மூலம் பிரதமர் மோடி நேரடியாக ராமநாதபுரத்தில் போட்டியிடுவார் என கூறப்படுகிறது. மேலும் ராமநாதபுரத்தில் போட்டியிடும் பாஜக, ராமர் சேது பாலத்தை தனது அரசியல் பிரச்சாரத்தின் மைய தூணாக மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் அதேபோல, மண்ணின் மகனும், ஏவுகணை மனிதரும், முன்னாள் குடியரசுத் தலைவருமான டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமைப் பற்றி மக்களிடையே எடுத்துச் செல்வதன் மூலம் மாற்றம் ஏற்படும் எனவும் நம்ப்பப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். 


அதுமட்டுமில்லாமல், தமிழகத்தில் பாஜகவின் செயல்பாடுகளை உற்று நோக்குகையில், தனுஷ்கோடி - ராமேஸ்வரம் இடையே புதிய சாலை அமைத்தது, மண்டபம் - பாம்பன் இடையே கடலில் புதிய தொழில்நுட்பம் அடிப்படையில் பாலம் கட்டும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது போன்ற பணிகள் கவனம் ஈர்த்துள்ளன. இதனால் கிட்டதட்ட பிரதமர் தமிழகத்தில் ராமேஸ்வரத்தின் பக்கம் தன் அசைவுகளை திருப்பியுள்ளார் என்று விமர்சகர்களால் நம்பப்படுகிறது.