கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று வெளியிடப்பட்டது. 25 ஆண்டுகளுக்கு முன் கார்கில் போரில் நமது ராணுவ வீரர்களின் ஒப்பற்ற வீரம், உறுதி, தியாகம் ஆகியவற்றுக்கு மரியாதை செலுத்தும் வகையில் தபால் துறை சிறப்பு தபால் தலையை வெளியிட்டுள்ளது.


கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா:


கார்கிலின் திராஸ் பகுதியில் இந்த தபால் தலை வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பங்கேற்று பேசுகையில், இந்த தபால் தலை நமது ராணுவ வீரர்களின் தீரத்தை கௌரவிப்பது மட்டுமின்றி அவர்களின் வீரத்தை நினைவுபடுத்தவும், தேசத்தின் பெருமித உணர்வை வெளிப்படுத்தவும் பயன்படுகிறது என்றார்.


நமது வரலாற்றில் முக்கியமான தருணத்தை இந்த அர்த்தமுள்ள தபால் தலை வெளியீடு உருவாக்கி உள்ளது என்றும், இதற்காக தபால் துறையை பாராட்டுவதாகவும் அமைச்சர் கூறினார்.  இந்த தபால் தலையை அனைத்து குடிமக்களும் வாங்குவதற்கு தாம் ஊக்கப்படுத்துவதாகவும், இது வெறும் சேகரிப்புக்கானதல்ல, நமது நன்றியின் அடையாளம், நமது தேசத்தை பாதுகாத்தவர்களுக்கு அளிக்கப்படும் மரியாதை என்று அமைச்சர் குறிப்பிட்டார்.


நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்கள்:


கார்கில் போர் கடந்த 1999 ஆம் ஆண்டு மே 8 ஆம் தேதி முதல் ஜூலை 26 ஆம் தேதி வரை நடைபெற்றது. கார்கில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் உள்ள இந்திய பகுதியை சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருந்த பாகிஸ்தான்   காஷ்மீரில் இருந்து லடாக்கைத் துண்டித்து, சியாச்சின் பள்ளத்தாக்கு மக்களை கைப்பற்ற திட்டமிட்டிருந்தது. இதனால் கார்கிலை பாதுகாக்க கார்கில்-திராஸ் பகுதிக்கு 30 ஆயிரம் படைகளை அனுப்பி இந்திய அரசு அனுப்பி வைத்தது. 


பாகிஸ்தான் ஆக்கிரமித்திருந்த நிலைகளை இந்திய விமானப்படை குண்டுவீசி தாக்கிய நிலையில்,  இதற்கு அப்போதைய பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் பர்வேஸ் முஷரஃப், லெப்டினன்ட் ஜெனரல் மஹ்மூத் அஹ்மத், மேஜர் ஜெனரல் ஜாவேத் ஹசன், ஜெனரல் அஷ்ரப் ரஷீத் ஆகியோர் மூளையாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இந்தியாவின் தாக்குதலால் ஆக்கிரமிப்பு பகுதியை விட்டு ஜூலை 26 ஆம் தேதி பாகிஸ்தான் படைகள் வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டதால் இந்த போர் முடிவுக்கு வந்து இந்தியா வெற்றி பெற்றது.


கார்கில் போரின் போது 527 வீரர்கள் தங்கள் இன்னுயிரை நீத்தனர். ஒவ்வொரு ஆண்டும் கார்கில் வெற்றி விஜய் திவாஸ் என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது.