டெல்லியில் உணவகங்களில் ரூஃப் டாப் ரெஸ்டாரன்ட் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. டெல்லி முனிசிபல் கார்பரேஷன் வழங்கியுள்ள இந்த அனுமதியால உணவக உரிமையாளர்களும் மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேபோல் ரூஃப் டாப், ஓபன் ஏர் டைனிங் வசதியுள்ள உணவகங்கள் அவற்றிற்கு என தனியாக கூடுதல் ஃபயர் சேஃப்டி சான்றிதழ் தரத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு கடந்த 4ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டுள்ளது.


அதன்படி 90 சதுர மீட்டர் உள்ள உணவகத்திற்கு ஏற்கனேவே தீயணைப்பு தடையில்லா சான்றிதழ் இருந்தால் அந்த உணவகம் தரைத் தளத்தில் ஓபன் ஸ்பேஸ் வைத்திருந்தாலும் சரி ரூஃப் டாப்பில் உணவகம் வைத்திருந்தாலும் சரி தனியாக ஏதும் தடையில்லா சான்றிதழ் பெறத் தேவையில்லை. ஆனால் திறந்தவெளியில் உணவு சமைத்தலோ, அதை தயாரித்தலோ இருக்கக் கூடாது. அதேபோல் அங்கு யாரேனும் மது அருந்தினால் அது மற்றவர்கள் பார்வைக்குப் படும்படி இருக்கக் கூடாது. ஒருவேளை உணவகத்தின் ஓபன் ஸ்பேஸ் மற்ற அருகில் உள்ள கட்டிடங்களில் இருந்து பார்க்கும்படி இருந்தால் அதை மறைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அதேபோல் ஓபன் ஸ்பேஸ், ரூஃப் டாப் உணவகத்திலிருந்து அக்கம் பக்கத்தில் எதையும் தூக்கி எறியும் செயல்கள் அனுமதிக்கபடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


டெரஸ் உணவகங்களில் ஃபாஸ்ட் புட் ஸ்டால், ஐஸ்க்ரீம் பார்லர், பான் பீடா ஸ்டால் அமைக்க அனுமதி தரப்பட மாட்டாது. அதேபோல் இசை குறிப்பிட்ட ஒலி அளவிலேயே இருக்க வேண்டும். லைவ் ஷோக்களுக்கு அனுமதியில்லை. ரூஃப் டாப் எனும்போது தண்ணீர் தொட்டிகள் மீது வாடிக்கையாளர்கள் ஏறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் ரூஃப் டாப், ஓபன் ஸ்பேஸ் அனுமதி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.


டெல்லியில் மாநகராட்சி தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. டெல்லியில் உள்ள 250 வார்டுகளுக்கான மாநகராட்சி தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது மாநகராட்சி பாஜக கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் இந்த முறை அதைக் கைப்பற்ற ஆம் ஆத்மியும், தக்கவைக்க பாஜகவும் கடும் போட்டா போட்டி போட்டு வருகின்றன. இந்தத் தேர்தலில் காங்கிரஸும் களம் காண்கிறது. இருந்தாலும் பாஜக, ஆம் ஆத்மி இடையே தான் போட்டி என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் ஒரே கட்டமாக நேற்று வெளியிடப்பட்டது. அதே போல் ஆம் ஆத்மி கட்சி தங்கள் வேட்பாளர்களின் பட்டியலை 2 கட்டங்களாக வெளியிட்டது. மேலும் பா.ஜ.க. சார்பில் 232 வேட்பாளர்களின் பெயர் பட்டியல் கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து 2-வது கட்டமாக 18 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டது.


டெல்லியில் இவ்வாறாக மாநகராட்சி தேர்தல் களை கட்டியுள்ள நிலையில் உணவகங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த சலுகை தேர்தலில் எதிரொலிக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். தேர்தல் வரும் டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெறுகிறது.