டெல்லியில் நடந்த ஷ்ரத்தா கொலை வழக்கு பொது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஷ்ரத்தாவை அவரது காதலன் ஆப்தாப் கொலை செய்து, அவரின் உடலை 35 பாகங்களாக வெட்டி எறிந்த சம்பவம் மனதை பதற வைத்தது.


இந்த சம்பவத்தை தொடர்ந்து, காதலன் காதலியை கொலை செய்யும் சம்பவங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரங்கேறி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. குறிப்பாக, லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த காதலனே காதலியை கொலை செய்யும் கொடூரம் சமீபகாலமாக தொடர் கதையாகி வருகிறது.


தொடரும் கொலை:


இந்நிலையில், ஷ்ரத்தா கொலையை போன்றே தலைநகர் டெல்லியில் இளம்பெண் ஒருவரை அவருடன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த காதலன் கேபிள் வயரை வைத்து கழுத்தை நெரித்து கொலை செய்த வழக்கில் தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 


காதலியை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டவர் 24 வயதான சாஹில் கெலாட். இவர், தனது காதலி நிக்கியைக் கொலை செய்து அதை மறைக்க முயன்றதாகக் கைது செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


கொலை தொடர்பாக விரிவாக பேசிய காவல்துறை தரப்பு, "சாஹிலுக்கு நிச்சயதார்த்தம் நடைபெறுவதற்கும் திருமணம் நடைபெறுவதற்கும் இடைப்பட்ட காலத்தில் காதலி நிக்கியை சாஹில் கொலை செய்துள்ளார். 


இருவரும் நான்கு ஆண்டுகள் காதலித்த போதிலும், நிக்கியை கொலை செய்துவிட்டு உடலை மறைக்க முயற்சி செய்துள்ளார் சாஹில். பின்னர், வேறு பெண்ணை திருமணம் செய்ய தயாராகி உள்ளார் சாஹில்" 


ஷ்ரத்தா கொலை வழக்கை போன்றே பல சம்பவங்களும் இந்த கொலை வழக்கில் நிகழ்ந்துள்ளது. ஷ்ரத்தாவை கொடூரமாக கொலை செய்துவிட்டு, அவரின் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி வீட்டில் மறைத்துவைத்துவிட்டு வேறு பெண்ணை வீட்டிற்கு அழைத்து டேட் செய்தது போல, சாஹிலும் மோசமாக நடந்து கொண்டுள்ளார்.


தோண்ட தோண்ட பகீர் தகவல்கள்:


நிக்கியை கொலை செய்துவிட்டு, பின்னர், பிப்ரவரி 9ஆம் தேதி, எந்த குற்ற உணர்ச்சியும் இன்றி தன்னுடைய நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டு என்ஜாய் செய்துள்ளார். நிச்சயதார்த்த பார்ட்டியில் நண்பர்களுடன் நடனமாடி மகிழ்ந்துள்ளார்.


மேலும், சாஹலின் திருமண வீடியோக்கள் வெளியாகி உள்ளது. கொலை செய்துவிட்டு எதுவும் தெரியாதவர் போல திருமண சடங்குகளை சாஹல் செய்வது சமூகத்தில் உள்ள உளவியில் பிரச்னைகளை வெளி கொண்டு வந்துள்ளது.


அடுத்த நாள், அவரது திருமணத்திற்கு முன், நிக்கி யாதவ் துரோகம் செய்ததாகக் கூறி அவருடன் சண்டையிட்டுள்ளார். இதையடுத்து, நிக்கியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அவரின் உடலை தனக்கு சொந்தமான உணவகத்தின் ஃப்ரிட்ஜில் சாஹல் மறைத்து வைத்துள்ளார்.