உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை பார்வையிட கட்டணமின்றி அனுமதி வழங்கப்படும் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தொல்லியல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாளை மற்றும் 18ம் தேதி மதியம் 2 மணிக்கு மேல் பார்வையாளர்கள் தாஜ்மகாலை கட்டணமின்றி சுற்றிப் பார்க்கலாம். அதேபோல் வரும் 19ம் தேதி நாள் முழுவதும் இலவசமாக பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.


காரணம் என்ன?


வழக்கமாக தாஜ்மகாலை பார்வையிட இந்தியர்களுக்கு 50 ரூபாயும், வெளிநாட்டவர்களுக்கு 1,100 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும். இந்நிலையில், தாஜ்மகாலை கட்டிய ஷாஜஹானின் 368வது நினைவு தினத்தை முன்னிட்டு நாளை முதல் 19ம் தேதி வரை ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை கட்டணமின்றி பார்வையாளர்கள் சுற்றிப்பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


வரலாற்றுச் சின்னம்:


பிரமாண்டமான கட்டுமானம், கலைநயமிக்க வேலைப்பாடுகளுடன் காதலை பிரதிபலிக்கும் விதமாக, கட்டப்பட்டுள்ள தாஜ்மகால், இந்தியாவின் முக்கியமான வரலாற்று சின்னம் என்பதோடு, பிரபலமான சுற்றுலா தளமாகவும் விளங்குகிறது. அதனை காண ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டவர்கள் உட்பட லட்சகணக்கானோர் வந்து செல்கின்றனர். இதனால், ஒவ்வொரு ஆண்டும் தாஜ்மகால் அனுமதி கட்டணம் மூலம், தொல்லியல்துறைக்கு சராசரியாக 50 கோடி ரூபாய் வருவாயாக கிடைக்கிறது.


தாஜ் மஹால் வரலாறு:


முகலாய பேரரசர்களில் ஒருவரான ஷாஜகான், தனது காதல் மனைவி மும்தாஜ் உயிரிழந்ததை அடுத்து, அவரை நினைவுகூரும் வகையில் பெரும் பொருட்செலவில் தாஜ் மகாலை கட்டி எழுப்பினார். இதற்காக திபெத் மற்றும் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து அவை கொண்டு வரப்பட்டு தாஜ் மகால் வடிவமைக்கப்பட்டு உள்ளது. சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர முக்கிய காரணம் தாஜ் மஹாலின் கட்டட அமைப்பு மட்டுமின்றி,  அதன் அழகை மேம்படுத்த பொருத்தப்பட்டுள்ள உலகின் அதிக விலை உயர்ந்த பல்வேறு விதமான பளிங்கு கற்களும் தான். 


சிறப்பம்சம் என்ன?


குறிப்பாக தாஜ் மகால் பொருத்தப்பட்டுள்ள வெள்ளை நிற கற்கள் அதிக விலை உயர்ந்தவை. இந்த கற்களின் சூரிய ஒளியை பிரதிபலிக்கும்  தன்மையை கொண்ட காரணத்தால் தான், காலை, மாலை மற்றும் இரவு என 3 வேளைகளிலும் தாஜ் மஹால் வெவ்வேறு நிறங்களில் பிரதிபலிக்கிறது.  அதன்படி,  காலையில் பிங்க் நிறத்திலும், மாலையில் பால் நிறத்திலும்  ஒளிரும் தாஜ் மகால், இரவில் நிலா ஒளியில் தங்க நிறத்திலும் தோற்றமளித்து  கண்களுக்கு விருந்தளிக்கிறது.


தாஜ்மகாலில் தொடரும் திருட்டு:


இதனிடையே, தாஜ்மகாலின் பொலிவை கூட்டும் விலை மதிப்பில்லா கற்கள் ஒவ்வோர் ஆண்டும் திருடப்பட்டு வருகிறது.  அப்படி காணாமல் போக கூடிய கற்களுக்கு பதிலாக புதிய கற்களை பதித்து வரும் பணியை தொல்லியல் துறை செய்து வருகிறது. கடந்த 7 ஆண்டுகளில் இதுவரை ரூ.2.5 கோடி அளவுக்கு நிதியை செலவிட்டு, தாஜ்மகாலின்  பல பகுதிகளில் கற்கள் நிறுவப்பட்டுள்ளன. குறிப்பாக, ஷாஜகான் மற்றும் மும்தாஜ் கல்லறை, தாஜ் மகாலின் மாடம் மற்றும் ராயல் கேட் பகுதி போன்ற முக்கிய பகுதியில் இருந்தும் கற்கள் காணாமல் போயுள்ளன என, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது.