Delhi Flood : அச்சச்சோ.. இன்னும் 350 மீட்டர்தான்...டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டை நெருங்கும் வெள்ளம்..

டெல்லியின் நிலைமை எந்தளவுக்கு மோசமாக உள்ளது என்றால், முதலமைச்சர் கெஜ்ரிவாலின் வீட்டில் இருந்து 350 மீட்டர் தொலைவு வரையில் வெள்ளம் தேங்கியுள்ளது.

Continues below advertisement

ஹரியானா, இமாச்சல பிரதேசம், சண்டிகர் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர் கனமழை காரணமாக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு யமுனை ஆற்றின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

Continues below advertisement

வெள்ளத்தில் மூழ்கியுள்ள டெல்லி:

இந்த வெள்ளம், குறிப்பாக, டெல்லியை கடுமையாக பாதித்துள்ளது. இதனால் இயல்பு வாழ்க்கை மற்றும் போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள், அவசரகால எச்சரிக்கையை விடுத்துள்ளனர். 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வெள்ள நீரை தடுக்கும் முயற்சியில், டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் மற்றும் பிற உயர் அரசு அதிகாரிகள் வசிக்கும் சிவில் லைன்ஸ் குடியிருப்புப் பகுதியில் வெள்ளத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

டெல்லியின் நிலைமை எந்தளவுக்கு மோசமாக உள்ளது என்றால், முதலமைச்சர் கெஜ்ரிவாலின் வீட்டில் இருந்து 350 மீட்டர் தொலைவு வரையில் வெள்ளம் தேங்கியுள்ளது.

டெல்லியில் முதலமைச்சர் அலுவலகம் உள்ள தலைமைச் செயலகம் உள்பட பல முக்கியப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளது. நகரத்தில் உள்ள அனைத்து அத்தியாவசிய அரசு அலுவலகங்களும் ஞாயிற்றுக்கிழமை வரை மூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் வீட்டையும் விட்டுவைக்காத வெள்ளம்:

45 ஆண்டு காலத்தில் இல்லாத அளவுக்கு காலை 10 மணியளவில் நீர்மட்டம் 208.53 மீட்டரைத் தொட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டெல்லியில் வெள்ள நிலைமை தீவிரமாக உள்ளது என குறிப்பிட்டுள்ள மத்திய நீர் ஆணையம் 
நீர்மட்டம் மேலும் உயரும் என்று எச்சரித்துள்ளது.

மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஞாயிற்றுக்கிழமை வரை வீட்டில் இருந்து பணிபுரியும் ஏற்பாடுகளை மேற்கொள்ள தனியார் அலுவலகங்களுக்கு கெஜ்ரிவால் அறிவுறுத்தியுள்ளார். அதிகரித்து வரும் சவால்களுக்கு மத்தியில், மூன்று சுத்திகரிப்பு நிலையங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால், டெல்லியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

நகருக்குள் வெள்ள நீர் புகுந்ததால், போட் கிளப், பாண்டவ் நகர், காந்தி நகர், பஜன்புரா உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. யமுனை ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், வாகன கட்டுப்பாடுகள் குறித்து போக்குவரத்து போலீசார் அறிவுரைகளை வழங்கியுள்ளனர். டெல்லிக்கு செல்லாத வணிக வாகனங்கள் நகருக்குள் நுழைய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்ட நிலையில், கிழக்கு மற்றும் மேற்கு புற விரைவுச் சாலைகளில் திருப்பி விடப்பட்டு வருகின்றன.

சட்டம் ஒழுங்கை பராமரிக்க, நகர காவல்துறை நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் கூடுவதற்கும், வெள்ளம் பாதித்த பகுதிகளில் குழுக்களாக செல்லவும் பொது நடமாட்டத்திற்கும் தடை விதித்துள்ளது. நகரின் வெள்ள பாதிப்பு குறித்து துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா மற்றும் கெஜ்ரிவால் ஆகியோர் தொடர்ந்து ஆலோசனை செய்ய உள்ளனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola