டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலைக்கு சரிந்துள்ள சூழலில் வாய்ப்புள்ளவர்கள் வீட்டிலிருந்தே அலுவலகப் பணியை மேற்கொள்ளலாம். ஒருவேளை அலுவலகம் சென்றே ஆக வேண்டும் என்போர் வாகனங்களை பகிர்ந்து கொண்டு செல்லலாம் என்று மக்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார் டெல்லி சுற்றுப்புற சூழல் அமைச்சர் கோபால் ராய்.


டெல்லியில் இன்று நிருபர்களிடம் பேசியா அவர், "வாகன மாசுபாட்டை குறைக்க மக்கள் வீட்டில் இருந்தே வேலை செய்ய வேண்டும். மக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும். அரசியல் மூலம் காற்று மாசு பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. காற்றின் தர மேலாண்மை ஆணையத்தின் திட்டம் உத்தரப்பிரதேசம், ஹரியானாவிலும் செயல்படுத்தப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் பாஜக அரசியல் செய்கிறது. விவசாயிகளை துன்புறுத்துவதையும், துஷ்பிரயோகம் செய்வதையும் மத்திய அரசு நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார். 


மேலும் அவர் பேசுகையில், " மக்கள் தண்ணீர் கொத்திக்க வைக்க நிலக்கரி, விறகு பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். பாதுகாவலர்களுக்கு எலக்ட்ரிக் ஹீட்டர்களை மக்கள் வழங்கினால் அவர்கள் குளிருக்கு பொது இடங்களில் தீ மூட்ட மாட்டார்கள். நாம் ஒவ்வொருவருமே காற்று மாசை கட்டுப்படுத்து நம் பங்குக்கு ஆனதை செய்ய வேண்டும். அடுத்தவர்கள் எல்லாம் செய்வார்கள் என்று நாம் காத்திருக்கக் கூடாது. பட்டாசு வெடிப்பதை மக்கள் முற்றிலுமாக கைவிட வேண்டும். இதுபோன்ற மோசமான மாசு நிலுவகையில் பட்டாசு புகை அதை மேலும் மோசமாக்கிவிடும்" என்றார். 


நடவடிக்கை என்ன?
டெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றிப் பேசிய அமைச்சர் கோபால் ராய், "அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் நடத்திய ஆய்வில் டெல்லியில் 31 சதவீத காற்று மாசுக்குக் காரணம் உள்ளூர்வாசிகள். 54.5 சதவீத காற்று மாசு டெல்லி கேப்பிட்டல் ரீஜனில் இருந்தும் எஞ்சிய மாசு விவசாயக் கழிவு எரிப்பதாலும் ஏற்படுகிறது. காற்று மாசு தாக்கத்தைக் குறைக்க சாலைகளில் டாங்கர் லாரி மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்படுகிறது"  என்றார். முன்னதாக இன்று டெல்லியில் தடையை மீறி கட்டுமானப் பணியை மேற்கொண்டதாக பாஜக அலுவலகப் பணியில் ஈடுபட்டிருந்த லார்சன் அண்ட் டூர்போ நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.


டெல்லியில் காற்று மாசு அதிகமாக இருப்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் வலியுறுத்தியுள்ளது தொடர்பான கேள்விக்கு அது குறித்து மேலிடத்தற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.


காற்றின் தரத்தை அளக்கும் அமைப்பானது, காற்றின் தரக் குறியீடு 50 என்றிருந்தால் அது நல்ல நிலைமை, 100 முதல் 101 என்றளவில் இருந்தால் திருப்திகரமான தரம், 101 முதல் 200 வரை இருந்தால் அது மிதமானது, 201 முதல் 300 வரை இருந்தால் அது மோசமான தரம், 301 முதல் 400 வரை இருந்தால் மிகவும் மோசமான தரம், 401 முதல் 500 என்றிருந்தால் அதிபயங்கர மோசம் என்று நிர்ணயித்துள்ளது. டெல்லியில் புதன் கிழமை காலையில் காற்று மாசு 354 என்றளவில் இருந்தது. நொய்டாவில் 406 என்ற மிக அபாயகரமான அளவில் இருந்தது. நேற்று வடமேற்கு டெல்லியில் காற்று மாசு 571 என்ற கொடூரமான அளவில் இருந்தது.