Manish Sisodia Arrested: டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கைது - பெரும் பரபரப்பு..!
டெல்லியின் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில் புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில், துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியின் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்துள்ளப்பட்ட நிகழ்வானது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுபான கொள்கை:
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி, ஆட்சிக்கு வந்தபிறகு, மதுபான விற்பனை கொள்கையில் மாற்றம் கொண்டு வந்தது. கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பரில் டெல்லி அரசு புதிய மதுபானக் கொள்கையை அறிமுகம் செய்தது.
அதனடிப்படையில், டெல்லி பல மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, 800-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பு எழுந்தது.இதனால், கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலையில் புதிய மதுபானக் கொள்கையை டெல்லி அரசு திரும்பப் பெற்றது.
குற்றச்சாட்டு:
இதனிடையே, மதுபானக் கொள்கையை நடைமுறைப்படுத்தியதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக டெல்லி துணைநிலை ஆளுநர் வினய்குமார் சக்சேனா குற்றம்சாட்டினார். துணைநிலை ஆளுநரின் குற்றச்சாட்டை தொடர்ந்து, இதுதொடர்பாக டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா உட்பட 15 பேர் மீது மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) வழக்கு பதிவு செய்தது.
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணைக்காக மணிஷ் சிசோடியா, இன்று காலை சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகினார். இதனால், டெல்லி சாலைகள் பரபரப்பாக காணப்பட்டது.
கைது:
அப்போது காலையில் பேசிய சிசோடியா, "நான் 7-8 மாதங்கள் சிறையில் இருந்தால் கூட, என்னை நினைத்து வருத்தப்படாதீர்கள். பெருமை கொள்ளுங்கள். பிரதமர் மோடி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பயப்படுகிறார். எனவே, அவர் என்னை ஒரு போலி வழக்கில் சிக்க வைக்க விரும்புகிறார் என தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று தொடர் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. இது ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்கவும்: Arvind Kejriwal: ஞாயிற்றுக்கிழமை அரெஸ்ட் என்ற அர்விந்த் கெஜ்ரிவால்..! சொன்னது போல சிசோடியாவை கைது செய்த சிபிஐ..! நடந்தது என்ன?