கோவை மாவட்டம் சூலூர் விமானப் படை தளத்தில் இருந்து நேற்று காலை 10.30 மணிக்கு நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் ராணுவ மையத்துக்கு Mi-17V5 ராணுவ ஹெலிகாப்டர் புறப்பட்டு சென்றது. அந்த விமானம் திடீரென விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் பயணம் செய்தனர். 






விபத்தில் சிக்கி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். கேப்டன் வருண் சிங் 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பிபின் ராவத்தின் மறைவுக்கு நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அனைவரது உடல்களும் டெல்லிக்கு இன்று கொண்டு செல்லப்பட்டது.  டெல்லியில் வைக்கப்பட்ட அவரது உடல்களுக்கு ராணுவ வீரர்கள் மரியாதை செலுத்தினர். மறைந்த பிபின் ராவத், மதுலிகா ராவத்துக்கு அவரது  மகள்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். அதேபோல் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த எல்.எஸ்.லிடர் உடலை பார்த்து  அவரது 16 வயது மகள் கண்ணீர் சிந்தினார். இது காண்போரை கலங்கை வைத்தது. மேலும் சரியாக இரவு 8.50க்கு வந்த பிரதமர் மோடி உயிரிழந்த வீரர்களுக்கு சல்யூட் அடித்து மரியாதை செய்தார்.