இந்திய நாடாளுமன்றத்தில் இதுவரை எத்தனை முறை நம்பிக்கையில்லா தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதில் ஆட்சியை இழந்தவர்கள் யார் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.


நம்பிக்கையில்ல தீர்மானம்:


மணிப்பூர் விவகாரத்தில் பாஜக தலைமயிலான மத்திய அரசுக்கு எதிராக,  நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன. மக்களவையை சேர்ந்த எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும், 50 எம்.பிக்களின் ஆதரவுடன் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரலாம். அதன் மீது விரிவான விவாதம் நடத்தப்பட்டு, இறுதியில் மக்களவை உறுப்பினர்கள் இடையே வாக்கெடுப்பு நடத்தப்படும். ஒருவேளை அந்த தீர்மானத்திற்கு பெரும்பான்மயான ஆதரவு கிடைத்தால் ஆட்சி கலைக்கப்படும். இந்நிலையில், இந்திய நாடாளுமன்றத்தில் இதுவரை கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானங்கள், அதனால் ஆட்சியை இழந்த பிரதமர்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.


27 நம்பிக்கையில்லா தீர்மானங்கள்ள்


கடந்த 1952ம் ஆண்டுக்குப் பிறகு தற்போது வரை இந்திய நாடாளுமன்றத்தில் 27 முறை நம்பிக்கையில்லா தீர்மானங்களும், 12 முறை பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை தீர்மானங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன.  இந்தியா இதுவரை கண்ட 14 பிரதமர்களில் 8 பேர் நம்பிக்கையிலா தீர்மானத்தை எதிர்கொண்டுள்ளனர். இதில், முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தான் நீண்ட நேரம் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.


முதல் நம்பிக்கையில்லா தீர்மானம்:


நாடாளுமன்றத்தின் முதல் நம்பிக்கையில்லா தீர்மானம், கடந்த 1963ம் ஆண்டு பிரதமர் நேருவிற்கு எதிராக கொண்டு வரப்பட்டது. அது தோல்வியில் முடிந்தது.  தொடர்ந்து, 1964 மற்றும் 1965ம் ஆண்டுகளில், லால் பகதூர் சாஸ்திரியின் ஆட்சிக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானங்களும் தோல்வியையே சந்தித்தன. 


இந்திரா காந்தியின் சாதனை:


நாடாளுமன்றத்தில் இதுவரை கொண்டுவரப்பட்ட 27 நம்பிக்கையில்லா தீர்மானங்களில் 15 தீர்மானங்கள், 16 ஆண்டுகள் பிரதமர் பதவி வகித்த இந்திரா காந்தி அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி, 1966ம் ஆண்டில் மட்டும் 2 முறையும், 1967 மற்றும் 1968ம் ஆண்டுகளில் தலா 2 முறையும் நம்பிக்கையில்லா தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. 1969, 1970, 1973, 1974ம் ஆண்டுகளில் 2 முறை, 1975, 1981ம் ஆண்டில் இரண்டு முறை மற்றும் 1982 ஆகிய ஆண்டுகளில் இந்திரா காந்திக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அனைத்து முறையும் இந்த தீர்மானங்கள் தோல்வியையே சந்தித்தன. 


தோல்வியை சந்தித்த பிற தீர்மானங்கள்:


இதனிடையே, 1978 மற்றும் 1979ம் ஆண்டுகளில் மொரார்ஜி தேசாய்க்கு எதிராக கொண்டு வரப்பட்ட இரண்டு நம்பிக்கையிலா தீர்மானங்களும் தோல்வியையே சந்தித்தன. 1987ம் ஆண்டு ராஜிவ் காந்திக்கு எதிராகவும், கொண்டு வரப்பட்ட தீர்மானமும் தோல்வியை சந்தித்தது. இதேபோன்று, 1993ம் ஆண்டு நரசிம்ம ராவிற்கு எதிராகவும், 2003ம் ஆண்டு வாஜ்பாயி அரசுக்கு எதிராகவும், 2018ம் ஆண்டு மோடியின் ஆட்சிக்கு எதிராகவும் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானங்கள் தோல்வியை சந்தித்துள்ளன.


பதவியை இழந்த 3 பிரதமர்கள்:


அதேநேரம், 1990ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் பெரும்பான்மை ஆதரவை பெற்றதால், பிரதமர் வி.பி. சிங் ஆட்சியை இழந்தார். 1997ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானமும் பெரும்பான்மை ஆதரவை பெற்றதால், அப்போது பிரதமராக இருந்த தேவ கவுடா ஆட்சியை இழந்தார். இதேபோன்று, 1999ம் ஆண்டுகொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின் போது, ஜெயலலிதா தனது ஆதரவை திரும்பப் பெற்றதால் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வாஜ்பாய் ஆட்சி கலைந்தது.