Covid JN.1 variant: கொரோனா ஜேஎன்.1 வேரியண்ட் அதிதீவிரமாக பரவினாலும், மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை என எய்ம்ஸ் முன்னாள் இயக்குனர் ரந்தீப் குலேரியா எச்சரித்துள்ளார். 


கொரோனா ஜேஎன்.1 எச்சரிக்கை:


கொரோனா ஜேஎன்.1 வேரியண்ட் தொடர்பாக பேசியுள்ள எய்ம்ஸ் முன்னாள் இயக்குனர் ரந்தீப் குலேரியா, “புதிய கொரோனா வேரியண்டான  JN.1 மிகவும் வேகமாக பரவுகிறது. அதிக நோய்த்தொற்றுகளை ஏற்படுத்துகிறது. ஆனாலும் கடுமையான நோய்த்தொற்றுகள் அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது போன்ற சூழலை ஏற்படுத்தவில்லை. இந்த வேரியண்ட் படிப்படியாக ஆதிக்கம் செலுத்துகிறது. பெரும்பாலும், காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி, மூக்கு ஒழுகுதல் மற்றும் உடல்வலி போன்றவை முக்கிய அறிகுறிகளாக உள்ளன. 


கூடுதல் டோஸ் தடுப்பூசி அவசியமா?


தொற்று பரவல் அதிகரித்து வருவது தொடர்பாக பேசியுள்ள இந்தியா SARS-CoV-2 ஜீனோமிக்ஸ் கூட்டமைப்பின் (INSACOG) தலைவர் டாக்டர் என்.கே. அரோரா, ”JN.1 க்கு எதிராக தடுப்பூசியின் கூடுதல் டோஸ் தற்போது தேவையில்லை. 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள், கூட்டு நோய்கள் இருக்க வாய்ப்புள்ளவர்கள் மற்றும் புற்றுநோயாளிகள் போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை அடக்கும் மருந்துகளை உட்கொள்பவர்கள் அனைவருக்கும் தடுப்பு அவசியம். இதுவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை எனில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இல்லையெனில், கூடுதல் டோஸ் எதுவும் தேவையில்லை” என்று எச்சரித்துள்ளார்.


22 பேருக்கு புதிய வேரியண்ட் தொற்று:


இந்தியாவில் சனிக்கிழமை வரையில் 22 பேருக்கு புதிய வேர்யண்ட் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த 79 வயதான நபர் தான், இந்தியாவில் முதல் நபராக இந்த வேரியாண்டால் பாதிக்கப்பட்டார். அதையடுத்து தற்போது கோவாவைச் சேர்ந்த 19 பேர் இந்த வேரியண்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மே மாதம் 21ம் தேதிக்குப் பிறகு, அதிகபட்சமாக நேற்று 752 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் தற்போது 3 ஆயிரத்து 420 பேர் தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். விரவிலேயே இந்த எண்ணிக்கை 4000 தொடும் என கூறப்படுகிறது. மகாராஷ்டிரா, ஒடிஷா போன்ற பல்வேறு மாநிலங்களில் புதிய வேரியண்ட் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொற்று பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் முடுக்கி விட்டுள்ளன. கூட்டம் மிகுந்த பகுதிகளில் தனிமனித இடைவெளியை பின்பற்றவும், மாஸ்க் அணிந்து பொது இடங்களுக்கு செல்வதன் மூலம் தொற்று பாதிப்பை பொதுமக்கள் தவிர்க்கலாம்.  முன்னதாக, கொரோனா தொற்றின் புதிய வேரியண்டான ஜேஎன்.1 கவனிக்கப்பட வேண்டியது எனவும், அதேநேரம் இதனால் ஏற்படும் ஆபத்து என்பது குறைவானது எனவே உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.