அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னோட்டமாக இந்தாண்டு பல்வேறு மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. அந்த வகையில், ஆண்டின் தொடக்கத்தில், திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. மூன்று மாநிலங்களிலும் பாஜக அல்லது பாஜக அங்கும் வகிக்கும் கூட்டணியே ஆட்சி அமைத்தது.


முக்கியத்துவம் வாய்ந்த கர்நாடக தேர்தல்:


அதற்கு அடுத்தபடியாக, கர்நாடகாவில் வரும் 10ஆம் தேதி, சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதற்கான முடிவுகள், 13ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. தென்னிந்தியாவை பொறுத்தவரையில் பாஜக ஆளும் ஒரே மாநிலம் கர்நாடகம் என்பதால், இது முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக கருதப்படுகிறது.


தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே, அரசியல் பரபரப்பு தொற்றி கொண்ட நிலையில், கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோல, ஆட்சியை தக்க வைக்க பாஜக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உள்ளூர் விவகாரங்களை காங்கிரஸ் கையில் எடுத்துள்ள நிலையில், தேசிய அளவிலான பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பாஜக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.


வாக்குபதிவுக்கு இன்னும் 4 நாள்களே உள்ள நிலையில், பிரதமர் மோடி தொடங்கி மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர்கள், முக்கிய தலைவர்கள் என அனைவரையும் களத்தில் இறக்கியுள்ளது பாஜக. அதேபோல, காங்கிரஸ் கட்சியின் சார்பில் அதன் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.


ஆட்சி அமைக்க போவது யார்?


கர்நாடகாவில் அடுத்து ஆட்சி அமைக்க போவது யார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ள நிலையில், தேர்தலுக்கு முந்தைய கருத்துகணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. சமூக பொருளாதாரம் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் சி வோட்டர் நிறுவனம், ஏபிபி செய்தி நிறுவனத்துடன் இணைந்து இந்த கருத்துகணிப்பை நடத்தியுள்ளது.


கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி தொடங்கி நேற்று வரையில் இந்த கருத்துகணிப்பு நடத்தப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 6420 பேரிடம் நடத்தப்பட்ட கருத்துகணிப்பின் முடிவுகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. வெளியான கருத்துகணிப்பு முடிவுகளின் படி, வரும் தேர்தலில் 40.2 சதவிகித வாக்குகளை பெற்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் இந்த முறை ஆட்சி அமைக்கும் என ஏபிபி- சி வோட்டர் கணித்துள்ளது.


தற்போதைய கருத்துகணிப்பில் கர்நாடகாவின் மூன்றாவது பெரிய கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம், இந்த முறை 16.1  சதவிகித வாக்குகளை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி, 38 சதவிகித வாக்குகளை பெற்றது. அதேபோல, தற்போது ஆளுங்கட்சியாக உள்ள பாஜக 36 சதவிகித வாக்குகளை பெற்றது.


காங்கிரசுக்கு பிரதான வாய்ப்பு:


கருத்துகணிப்பு முடிவுகளின்படி, 116 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. பாஜக 79 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 25 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதாவது, கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 110 தொகுதிகளிலும் முதல் 122 தொகுதிகள் வரையில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்றும், பா.ஜ.க. கூட்டணி 73 தொகுதிகள் முதல் 85 தொகுதிகள் வரையில் கைப்பற்றலாம் என்றும், ஜனதா தளம் 21 தொகுதிகளில் இருந்து 29 தொகுதிகள் வரை வெற்றி பெறலாம் என்றும் ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.