குடியரசுத் தலைவர் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக போட்டியிடும் ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்முவை சர்ச்சைக்குரிய விதத்தில் விமர்சித்ததாக பிரபல பாலிவுட் நடிகர் ராம்கோபால் வர்மா மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


ஜார்க்கண்டின் முன்னாள் ஆளுநராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற  பழங்குடித் தலைவரான திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது. இவர் ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சியில் இருந்த போது அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தகக்து. 


இன்று குடியரசுத் தலைவர் தேர்தலும் நடந்து முடிந்துவிட்டது. இந்நிலையில் பாலிவுட் இயக்குநர் ராம் கோபால் வர்மா மீது ஒரு புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுபாஷ் ராஜா ராவ் என்பவர் புகார் செய்துள்ளார். அவர் ராம் கோபால் வர்மாவுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு கோரியுள்ளார்.
அந்தப் புகாரில் ராம் கோபால் வர்மா பதிவு செய்துள்ள ட்வீட், அவமரியாதையா, அருவருப்பான, தீய, தவறான அர்த்தங்களும் உள் அர்த்தங்களும் கொண்டது. நமது குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்முவின் மாண்பை சிதைக்கக் கூடியது என்று தெரிவித்துள்ளார்.


அந்த ட்வீட் என்ன?


கடந்த ஜூன் 22 ஆம் தேதி பாலிவுட் பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் திரெளபதி குடியரசுத் தலைவர் என்றா? யார் பாண்டவர்கள்? கவுரவர்கள் யார்? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அவருடைய இந்த ட்வீட்டுக்கு நெட்டிசன்களே தகுந்த அடி கொடுத்திருந்தனர். இதனையடுத்து ராம் கோபால் வர்மா அந்த ட்வீட்டை யார் மனதையும் புண்படுத்தும் விதத்தில் எழுதவில்லை என்று கூறியிருந்தார்.


ஆனாலும் நெட்டிசன் களின் பலரின் பார்வையில், ராம் கோபால் வர்மா எப்போதும் பட்டியலின மக்களின் மீது வெறுப்பு கொண்டிருக்கிறார். இதுபோன்ற விமர்சனங்கள் மூலம் தன்னை எப்போதும் ஊடக வெளிச்சத்தில் வைத்துக் கொள்ளலாம் என நினைக்கிறார். ராம் கோபால் வர்மாவுக்கு சர்ச்சைக் கருத்துகள் ஒன்றும் புதிதல்ல. நான் சூட்டிங் ஸ்பாட்டிலேயே நீலப்படங்களைப் பார்ப்பேன் என்று சொல்லியவர் தான் அவர் என்று நெட்டிசன்கள் அவரை சரமாரியாக விமர்சித்துள்ளனர்.


ராம் கோபால் வர்மா தெலுங்கு திரைப்படத் துறையில் தனது முதல் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். இளையராஜா இசையமைத்து 1989 ஆம் ஆண்டு சிவா திரைப்படம் தெலுங்கில் வெளியிடப்பட்டது. தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியடைந்து, பின்னர் இத்திரைப்படம் இதே பெயரில் இந்தியில் மறுஆக்கம் செய்யப்பட்டு 1990 ஆம் ஆண்டு வெளியானது. மேலும் இத்திரைப்படம் உதயம் என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு தமிழில் வெளியானது.


பின்னர் வர்மாவின் இரண்டாவது திரைப்படம் வெங்கடேஷ் மற்றும் ஸ்ரீதேவி நடித்த க்ஷானா க்ஷானம் தெலுங்குத் திரைப்படம் வெற்றியடைந்ததன் விளைவாக இந்தியில் ஹெராண் என்றத் தலைப்பில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.


அதன் பின் வர்மா ரக்தா சரித்ர என்ற திரைப்படத்தை 2010ல் தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியிட்டார். இந்தியில் முதல் பாகமும்  இரண்டாம் பாகம் தமிழிலும் வெளியானது. தமிழில் ரத்த சரித்திரம் திரைப்படத்தில் சூர்யா , விவேக் ஒபரோய் மற்றும் பிரியாமணி நடித்திருந்தனர்.


1995 ஆம் ஆண்டு ஆமிர் கான் மற்றும் ஊர்மிளா நடித்து, ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில் வெளிவந்த ரங்கீலா திரைப்படம், மற்றும் 1998 ஆம் ஆண்டு வெளியான சத்யா ஆகிய திரைப்படங்கள் இந்தி சினிமாவில் வர்மாக்கு மிகப் பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது.