சூடானில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்கான ஆபரேஷன் காவேரி மீட்பு பணிக்கு அனைத்து வகையிலும் தழிழக அரசு ஒத்துழைப்பு வழங்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் 


தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதம்: சூடானில் உள்நாட்டுப் போர் காரணமாக நிலவி வரும் சிக்கலான நிலை காரணமாக அங்கு சிக்கித்தவிக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த சுமார் 400 பேர் உட்பட்ட இந்திய குடிமக்களை அழைத்து வரும் ஆபரேஷன் காவேரி மீட்பு பணிக்கு தமிழ்நாடு அரசு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்க தயார் நிலையில் உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


சூடானில் உள்நாட்டு போர் காரணமாக நிலவிய சிக்கலான நிலை தற்போது முன்னேற்றமடைந்து வரும் நிலையில், இந்திய குடிமக்கள் சூடானில் இருந்து விரைவாக வெளியேறுவதற்கு வசதியாக இந்திய விமானப்படை விமானம் மற்றும் இந்திய கடற்படை கப்பல்கள் சூடான் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்பது ஆறுதல் அளிப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழத்தை சேர்ந்த சுமார் 400 பேர் சூடானில் சிக்கித் தவித்து வருவதாகவும் அவர்கள் இந்தியாவிற்கு திரும்புவதற்கு தேவையான உதவிகளை எதிர்ப்பார்த்து இருப்பது குறித்து பிரதமர் அவர்களின் கவனத்திற்கு தாம் கொண்டு வர விரும்புவதாகவும், சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் முதல் தொகுதி ஐ.என்.எஸ் சுமேதா என்ற கப்பலில் இருக்கும் நிலையில் அவர்களின் உறவினர்களிடமிருந்து மாநில அரசுக்கு அவசர அழைப்புகள் வந்து கொண்டிருப்பதாகவும் தனது கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


மேலும் இது தொடர்பாக தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை குறித்த தகவலகளை பெறுவதற்கும் அங்கு சிக்கித் தவிக்கும் தமிழர்களை விரைவாக வெளியேற்றுவதற்கும் அனைத்து உதவிகளையும் வழங்கவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் சூடானில் உள்ள இந்திய தூதரகத்துடன் இணைந்து செயல்படவும் தமிழ்நாடு அரசு தயாராக இருப்பதாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஆபரேஷன் காவேரி மீட்பு பணியானது சூடானில் சிக்கித் தவிக்கும் தங்கள் உற்றார் உறவினர்களின் பாதுகாப்பாக திரும்புவதற்காக காத்திருக்கும் அனைத்து இந்தியர்களின் குடும்பங்களுக்கும் அமைதியையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரும் என தாம் நம்புவதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சூடானில் இருந்து இந்திய குடிமக்களை வெளியேற்றும் முயற்சிகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ஒத்துழைப்பு வழங்க தயார் நிலையில் இருப்பதாக மீண்டும் தனது கடிதத்தில் முதலமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.


ஆபரேஷன் காவேரி


ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையேயான சண்டை 10 நாட்களாக நீடித்து வருகிறது. இதனால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். அங்கு மூன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளனர். இந்நிலையில், இந்தியர்களை மீட்பதற்காக ஆபரேஷன் காவேரி என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஏற்கனவே சுமார் 500 இந்தியர்கள் சூடான் துறைமுகத்துக்கு வந்துள்ளதாகக் கூறி, அது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அனைவரையும் மீட்டுவர நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


ஏற்கனவே, இந்தியர்களை மீட்பதற்காக சவூதி அரேபியாவில் இரண்டு விமானப்படை விமானங்களை சூடான் துறைமுகத்தில் கடற்படை கப்பலையும் இந்தியா தயார் நிலையில் வைத்துள்ளது. இந்நிலையில், 5 இந்தியர்களை பிரான்ஸ் விமானப்படை விமானம் மீட்டுவந்துள்ளது. இதேபோல, சவூதி அரேபியாவும் சில இந்தியர்களை மீட்டுவந்துள்ளதாக அறிவித்துள்ளது.