சமீப காலமாக குற்றச் செயல்கள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக, லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஷ்ரத்தாவை அவரது காதலன் ஆப்தாப் கொலை செய்து, அவரின் உடலை 35 பாகங்களாக வெட்டி எறிந்த சம்பவம் மனதை பதற வைத்தது.


தொடரும் கொடூர கொலைகள்:


இதேபோன்ற சம்பவம் டெல்லியிலும் பின்னர் மும்பையிலும் நடந்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, சத்தீஸ்கரில் ஒரு பதற வைக்கும் சம்பவம் நடந்துள்ளது. சத்தீஸ்கர் தலைநகர் ராய்பூரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சற்று நேரத்திற்கு முன்பு, புதுமணத் தம்பதிகள் வீட்டில் உள்ள அறையில் கத்திக்குத்து காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


புதுமண தம்பதிகள்:


இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, மணமகன் தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். திக்ரபாரா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பிரிஜ்நகரில் நேற்று மாலை இச்சம்பவம் நடந்தது.


அஸ்லாம் (24) என்பவருக்கும் கஹ்காஷா பானோ (22) என்பவருக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடந்தது. அவர்களின் திருமண வரவேற்பு செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற இருந்தது. உறவினர் அனைவரும் தங்கள் அறைக்குள் விழாவிற்குத் தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது, மணமகளின் அலறல் சத்தம் கேட்டு மணமகனின் தாய் அங்கு விரைந்துள்ளார்.


ரத்தவெள்ளத்தில் மணமக்கள்:


அறை உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்தது. புதுமண தம்பதிகள் பதிலளிக்காததால், குடும்பத்தினர் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தபோது, ​​​​அவர்கள் ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடப்பதைக் கண்டு உறுவினர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று கத்தியால் குத்தப்பட்ட உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் இருந்து கத்தி மீட்கப்பட்டது.


இந்த சம்பவம் குறித்து காவல்துறை தரப்பு கூறுகையில், "கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மனைவியை கத்தியால் தாக்கி கணவனும் தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரிகிறது. எனினும், இது தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது" 


ஷ்ரத்தா கொலை:


முன்னதாக, டெல்லி ஷ்ரத்தா கொலை சம்பவம் தொடர்பாக, நாளுக்கு நாள் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது. இந்த கொடூர கொலை பற்றி சமீபத்தில் கூட வெளியான தகவல் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.


ஷ்ரத்தாவை கொலை செய்து அவரது உடல் பாகங்களை வெட்டிய பிறகு, அவரின் எலும்பு துண்டுகளை பளிங்கு வெட்டும் இயந்திரத்தை கொண்டு துண்டாக்கி கிரைண்டிங் மிஷினால் பவுடர் ஆக்கியுள்ளார் ஆப்தாப்.


கொலை செய்த மூன்று மாதங்களுக்கு பிறகு, ஷ்ரத்தாவின் தலையை ஆப்தாப் அப்புறப்படுத்தி இருக்கிறார் என குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில்தான், காவல்துறையினர் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். அதில், பல அறிந்திராத தகவல்களை காவல்துறை வெளிகொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.