மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சி பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. முதலில், டெல்லி துணை முதலமைச்சராக பதவி வகித்து வந்த மணிஷ் சிசோடியா, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். ஆம் ஆத்மி கட்சியில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அடுத்தபடியாக இருந்தவர் மணிஷ் சிசோடியா. 


சிசோடியாவை தொடர்ந்து, மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். 


சஞ்சய் சிங்குக்கு எதிராக பரபரப்பு குற்றப்பத்திரிகை:


இந்த நிலையில், சஞ்சய் சிங்குக்கு எதிராக அமலாக்கத்துறை 60 பக்க பரபரப்பு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. பண மோசடி தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் உள்ளூர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கூடுதல் குற்றுப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக, ஏற்கனவே ஐந்து புகார் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.


குற்றஞ்சாட்டப்பட்ட தொழிலதிபரான தினேஷ் அரோரா, சஞ்சய் சிங்குக்கு 3 கோடி ரூபாய் கொடுத்ததாகவும் டெல்லி அரசின் மதுபான கொள்கைக்காக அவருக்கு இந்த பணம் தரப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் அமலாக்கததுறை வாதிட்டது. இந்த வழக்கில் அப்ரூவராக மாறிய அரோராவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அமலாக்கத்துறை இந்த குற்றச்சாட்டை முன்வைத்தது.


சட்ட போராட்டத்தில் தொடர் பின்னடைவு:


சஞ்சய் சிங்கின் வீட்டில் இருந்து ஆதாரங்களை கைப்பற்றியுள்ளதாகவும் இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த உள்ளதாகவும் அமலாக்கத்துறை தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது. டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டுக்கும் அவருக்கும் நேரடி தொடர்பு இருப்பதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையுமே சஞ்சய் சிங் மறுத்துள்ளார்.


தான் கைது செய்யப்பட்டதை எதிர்த்தும் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிப்பதற்கு தடை விதிக்கக் கோரியும் சஞ்சய் சிங், டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுவர்ண காந்த சர்மா, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். சட்ட போராட்டத்தில் தொடர் பின்னடைவுகளை சந்தித்து வரும் சஞ்சய் சிங், ஜாமீன் கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். சஞ்சய் சிங்கின் ஜாமீன் மனுவுக்கு வரும் டிசம்பர் 6ஆம் தேதிக்குள் பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.


மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளை மத்திய பாஜக அரசு மிரட்டுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பல எதிர்க்கட்சி தலைவர்களின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி கைது செய்துள்ளது. அந்த வரிசையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.