சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் குறைந்தபட்சமாக நிலவிலிருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.


இஸ்ரோ அறிவிப்பு:


இதுதொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “நிலவின் சுற்றுவட்டப்பாதையில் உள்ள சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரின், இரண்டாவது மற்றும் இறுதி உயரம் குறைப்பு நடவடிக்கை வெற்றிகரமாக முடிந்தது. அதன்படி, நிலவிலிருந்து குறைந்தபட்ச தூரமாக 25 கிலோ மீட்டர் தொலைவ்லும், அதிகபட்சமாக 134 கிலோ மீட்டர் தொலைவிலும் தற்போது லேண்டர் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து லேண்டரானது தன்னிச்சையாக உட்புற சோதனைகளை மேற்கொண்டு, தரையிறங்குவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தளத்தில் சூரிய உதயம் ஏற்படும் வரை காத்திருக்கும். பின்பு ஆகஸ்ட் 23ம் தேதி மாலை 5.45 மணியளவில் விக்ரம் லேண்டர் நிலவின் தரைப்பகுதியில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது. நிலவில் இருந்து குறைந்தபட்ச தூரம் 30 கிலோ மீட்டராக இருக்கும்போது தரையிறக்கம் செய்யப்படும் என தகவல் வெளியான நிலையில் தற்போது அது 25 கிலோ மீட்டர் தூரம் அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது.






சந்திரயான் 3:


நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் சந்திரயான்-3 விண்கலம்,  கடந்த ஜூலை 14-ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. பின்பு புவியின் சுற்றுவட்டப் பாதை தூரம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, 20 நாட்கள் பயணம் மேற்கொண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் சந்திரயான்- 3 விண்கலம் நுழைந்தது. 


தொடர்ந்து, ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் நிலவின் சுற்றுவட்டப்பாதை தூரத்தை குறைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. 9, 14 மற்றும் 16 ஆம் தேதி என படிப்படியாக தூரம் குறைக்கப்பட்டு, 3 தினங்களுக்கு முன்பாக விக்ரம் லேண்டர் பகுதி தனியாக பிரிந்தது.  தொடர்ந்து இரண்டு தினங்களுக்கு முன்பாக விக்ரம் லேண்டரின் உயரம் குறைக்கப்பட்டது. அதன்படி,  குறைந்தபட்சமாக 113 கிலோமீட்டரும் அதிகபட்சமாக 157 கிலோமீட்டர் தொலைவிலும் இருந்தது.  இந்நிலையில் தான், இரண்டாவது மற்றும் இறுதிக்கட்ட உயரம் குறைப்பு பணிகளை இன்று அதிகாலையில் இஸ்ரோ செய்து முடித்துள்ளது. 


இறுதிக்கட்ட பணிகள்: 


தற்போதுள்ள உயரத்தில் இருந்து, லேண்டரின் அடிப்பகுதியில் இருக்கும் நான்கு குட்டி ராக்கெட்டுகள் லேண்டரை மெல்ல மெல்லத் தரையிறக்க உதவும்.  அப்படி தரையிறக்கப்பட்டபின் அதிலிருந்து சிறிய சாய்தளம் வெளியே வரும். பின் விக்ரம் லேண்டரில் இருக்கும் பிரக்யான் எனும் ரோவர் சாய்தளத்தை பயன்படுத்தி வெளியே வரும். ரோவர் தான் நிலவில் ஆய்வு மேற்கொள்ளும் கருவியாகும். தொடர்ந்து பயணித்து ஆய்வுப்பணிகளை மேற்கொள்வது, பல்வேறு தகவல்களை சேகரித்து கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்புவது தான் சந்திரயானின் இறுதி  கட்டமாகும்.