தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், முன்னாள் ஆந்திர முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு சித்தூர் தாக்குதல் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.


 விஜயநகரம் பகுதியில் செய்தியாளர்களை சந்த்தித்த சந்திரபாபு நாயுடு, “என்னை கொல்ல பல முறை முயற்சி நடந்துள்ளது. ஆனால், என் மீதே காவல் துறையினர் வழக்கு பதிவு செய்திருப்பது வேடிக்கையாக உள்ளது. எனது பாதுகாவலர்கள், மீடியா மற்றும் பொதுமக்களே இதற்கு சாட்சி. என் மீதான கொலை முயற்சிகளை நான் அறிவேன். எனவே இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்துவது அவசியம்.” என்று தெரிவித்து சித்தூர் மாவட்டத்தில் நடந்த பேரணியின் வீடியோவை செய்தியாளர்களிடம் காண்பித்தார். 


” எங்கள் கட்சியினர் மீது பொய்யான வழக்குகளைப் பதிவு செய்து தேர்தல் சமயத்தில் அதை அவர்களுக்கு சாதகமாக மாற்றுவதற்கு பார்க்கிறார்கள். நான் மக்களிடையே செல்ல கூடாது என்பதற்காகவே என் மீது போலீஸார் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். என் மீது கல்வீசி தாக்குதல் நடந்தாலும், அங்கு வெறும் பார்வையாளர்களை போல காவல் துறையினர் இருக்கின்றனர்.  ஒரு எதிர் கட்சி தலைவர் வரும்போது, அங்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சரின் ஆதரவாளர்கள் கூட்டமாக வரவேண்டிய அவசியம் என்ன? என்று ஜெகன் மோகன் ரெட்டி மீது குற்றாசாட்டுகளை முன்வைத்தார். 


ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசு மாநிலத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க தவறிட்டதாகக் கூறி அணைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் உள்ள பகுதிகளுக்கு தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.


இவர் கடந்த வாரம் சித்தூர் மாவட்டம் புங்கனூரில்  சுற்று பயணத்தின் ஒரு பகுதியாக ரோட் ஷோ-வில் பங்கேற்றார். அப்போது அன்னமய மாவட்டம் தம்பல்லப்பள்ளி தொகுதிக்குட்பட்ட அங்கல்லுவில் சந்திரபாபு பேசி கொண்டுருந்தபோது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் சிலர் அங்கு வந்தனர். தெலுங்கு தேசம் கட்சியினரை தூண்டிவிட்டு சந்திரபாபு பேசியதாகவும் இதனால் ஏற்பட்ட வன்முறையை தடுக்க சென்ற காவல்துறையினரை அவர்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அதோடு,காவல் துறை வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது. 


சில நாட்களுக்கு முன்பு அன்னமயா மாவட்டம் புரபாலகோட்டா பகுதிக்கு சென்றபோது ஆளும் கட்சிக்கும், தெலுங்கு தேசம் கட்சிக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பின்னர் கலவரமாக மாறியது. இதில் காவல் துறையினர் உள்பட 50 பேர் படுகாயம்டைந்தனர். மேலும், காவல் துறை வாகனங்கள், ஏராளமான கடைகள் சேதப்படுத்தப்பட்டன.


அதுபோல சித்தூர் மாவட்ட புங்கனூர் பகுதியிலும் கலவரம் ஏற்பட்டது. அங்கு தெலுங்கு தேசம் கட்சியைச் சேந்த 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


அங்கல்லு கிராமத்தில் நிகழ்ந்த சம்பவம் தொடா்பாக உமாபதி ரெட்டி என்பவா் அளித்த புகாரில், முடிவீடு பகுதி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனையியல் சட்டத்தின் 120 பி, 147, 153, 307, 115, 109, 323, 324, 506 ஆகிய பிரிவுகளின்கீழ் பதிவு செய்யப்பட்ட அந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சந்திரபாபு நாயுடு பெயா் சோ்க்கப்பட்டுள்ளது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கங்காதர ராவ் தெரிவித்துள்ளார். தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவா்கள் தேவினேனி உமா, அமரநாத ரெட்டி, ராம்கோபால் ரெட்டி உள்ளிட்டோா் பெயா்களும் இடம்பெற்றுள்ளதாக அவா் தெரிவித்தாா்.