இந்திய தேசியக் கொடி இரவிலும் பறக்கலாம் என்று  தேசியக் கொடியை பறக்கவிடும் விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது.


ஹர் கர் ட்ரியங்கா:


இந்தியா தனது 75வது சுதந்திர தினவிழாவை கொண்டாட ஆயத்தமாகி வருகிறது. அதற்காக பல்வேறு விதமான கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ என்ற பெயரில் மத்திய அரசு இதனை கொண்டாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியாவில் உள்ள 20 கோடி வீடுகளில் ஆகஸ்ட் 13 முதல் ஆகஸ்ட் 15 வரை தேசியக்கொடியை பறக்கவிட மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதனை ‘ஹர் கர் ட்ரியங்கா’என்ற பெயரில் மத்திய அரசு கொண்டாடவிருக்கிறது.  இந்திய தேசியக் கொடியினை பறக்கவிடுவதற்கு விதிமுறைகள் உள்ள நிலையில் தற்போது அவற்றில் மத்திய அரசு மாற்றம் செய்துள்ளது.


கொடியேற்றும் விதி:


பொதுவாக தேசியக் கொடியை சூரியன் உதித்த பின்பு ஏற்றி சூரியன் மறைவதற்குள் இறக்கிவிடவேண்டும். அதேபோல, தேசியக் கொடியை அரசு அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகளில் தான் ஏற்ற முடியும், ஜனவரி 26 மற்றும் ஆகஸ்ட் 15 ஆகிய நாள்களில் தான் ஏற்றவேண்டும் என்பது போன்ற விதிமுறைகள் இருந்தது. 2002 ஆம் ஆண்டு "இந்திய தேசியக் கொடி சட்டம்" கீழ், இந்தியாவின் அனைத்து மக்களும் மூவர்ணக்கொடியை ஆண்டு முழுவதும் பயன்படுத்திக்கொள்ள உரிமை கிடைத்தது. இந்த விதிமுறைகளில் 2005ம் ஆண்டு மேலும் சில மாற்றம் செய்தது.




விதிகளில் மாற்றம்:


இந்த நிலையில், கொடியை காலையில் ஏற்றி மாலையில் இறக்கிவிடவேண்டும் என்ற விதிமுறையில் மத்திய அரசு மாற்றம் கொண்டுவந்துள்ளது. இந்திய தேசியக்கொடி விதிமுறைகள் 2002 பிரிவு 7ல் உள்ள இரண்டாவது பத்தியில் மாற்றம் செய்துள்ளது. புதிய மாற்றத்தின் படி “பொதுவெளியில் பறக்கவிடப்படும் அல்லது பொதுமக்கள் வீட்டில் பறக்கவிடப்படும் கொடியானது பகல் மற்று இரவிலும் பறக்கலாம்” என்று திருத்தம் செய்துள்ளது. மேலும், இயந்திரம் மூலம் தயாரிக்கப்பட்ட பருத்தி, பாலியஸ்டர், பட்டு, காதி துணிகளால் ஆன தேசியக்கொடிகளையும் பயன்படுத்தலாம் என்றும் திருத்தம் செய்துள்ளது.


உள்துறைச் செயலா் கடிதம்:


இதுகுறித்து அனைத்து மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு உள்துறைச் செயலா் அஜய் பல்லா கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கொடி ஏற்றுதல் தொடர்பாக செய்யப்பட்டுள்ள விதிமுறை திருத்தங்களை  பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் அறியும்படி செய்யுமாறு வலியுறுத்தியுள்ளாா்.