கொல்கத்தா மருத்துவர் வழக்கு தொடர்பாக வெளியான குற்றப்பத்திரிகையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யவில்லை என்றும் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சஞ்சய் ராய், மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாக குற்றப்பத்திரிகையில் சிபிஐ குறிப்பிட்டுள்ளது.


கொல்கத்தா மருத்துவர் வழக்கு:


மேற்குவங்கத்தில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்பை கிளப்பியது. கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவருக்கு இந்த கொடூரம் நடந்தது. 


இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்குவங்கம் மட்டும் இன்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். மேற்குவங்கத்தை ஆளும் மம்தா தலைமையிலான திரிணாமுல் அரசுக்கு இது பெரும் நெருக்கடியாக மாறியது.


பெரும் கொந்தளிப்பை தொடர்ந்து, உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலுக்கு பிறகு, வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது.


குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்கள்:


அதில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. பெண் மருத்துவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக ஊடகங்களில் தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது. ஆனால், குற்றப்பத்திரிகையில் சிபிஐ, அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. 


முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சஞ்சய் ராய் மட்டுமே மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாகவும் அவரே கொலை செய்திருப்பதாகவும் குற்றப்பத்திரிகையில் சிபிஐ குறிப்பிட்டுள்ளது. இரண்டு மாதங்களில் விசாரணையை முடித்துள்ள சிபிஐ, இன்று பிற்பகல் சீல்டாவில் உள்ள கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை சமர்ப்பிக்க உள்ளது.


குற்றப்பத்திரிகையில் சஞ்சய் ராயை முக்கிய குற்றவாளியாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் சுமார் 200 பேரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல வெளியாகியுள்ளன.


இந்த வழக்கில் தொடக்கத்தில் இருந்தே சம்பவம் நடந்த கல்லூரியின் முதல்வரான சந்தீப் கோஷ் மீது சந்தேக கண்கள் பாய்ந்து வருகிறது. குறிப்பாக, இந்த சம்பவம் பெரிய பிரச்னையாக வெடித்த உடனேயே தன்னுடைய கல்லூரி முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். 


சம்பவம் நடந்த உடனேயே காவல் நிலையத்தில் புகார் அளிக்காமல் தாமதம் செய்தது, கொல்லப்பட்ட பெண்ணின் பெற்றோர்களிடம் தவறான தகவல்களை அளித்தது சந்தீப் கோஷ் மீதான சந்தேகத்தை மேலும் அதிகரிக்க செய்தது.


மம்தா பானர்ஜிக்கு நெருக்கமானவராக கருதப்படும் சந்தீப் கோஷ்,வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கேட்ட கேள்விக்கு திருப்திகரமான பதில் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. கல்லூரி முதல்வராக இருந்தபோது ஆர்.ஜி. கர் மருத்துவ கல்லூரி அரசு மருத்துவமனையில் சந்தீப் கோஷ் நிதி முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார்.