வருகின்ற 23ம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 


கடந்த 3ல் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் நவம்பர் 1 முதல் 23ம் தேதி வரை தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 2,600 கன அடி நீர் திறக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்திற்கு கர்நாடகம் தண்ணீர் திறந்துள்ளதா? என்பதை கணக்கீடு செய்ய கூட்டம் நடைபெறுகிறது. 


காவிரி விவகாரம்:


தமிழ்நாட்டில் தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் விவசாயத்திற்கான தண்ணீரை வழங்க கர்நாடகா அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. அது காங்கிரஸ் அரசாங்கமாக இருந்தாலும் சரி, பாஜக அரசாக இருந்தாலும் சரி. ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தையும், உச்சநீதிமன்றத்தையும் நாடிதான் டெல்டா பகுதி மக்களுக்கு தண்ணீர் பெற்று தர வேண்டியதாக இருக்கிறது.


அந்த வகையில் இந்த முறையும் கூட சம்பா சாகுபடிக்காக தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரை சித்தராமையா தலைமையிலான கர்நாடக அரசு தரவில்லை. அதன்பிறகு, தமிழ்நாடு அரசின் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு காவிரி டெல்டா பாசனத்திற்காக கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்க, அதன்பிறகு காவிரி மேலாண்மை ஆணையம் அதையே உத்தரவாக பிறப்பித்தது. அதன்படி, முன்னதாக ஆணையம் பிறப்பித்த உத்தரவின்படி தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்த நிலையில் அதனை கர்நாடக அரசு திடீரென குறைத்தது.


தண்ணீர் அளவு:


காவிரிப் படுகையில் அக்டோபர் 16 முதல் 27-ம் தேதி வரை பெய்த மழை வழக்கத்தை விட குறைவாகவே பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியது. 


இந்தநிலையில், நடப்பு நீர் ஆண்டில் ஜூன் 1 முதல் 26 வரை 140 டிஎம்சி அடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், கர்நாடக 56.394 டிஎம்சி அடியை மட்டுமே திறந்துவிடப்படுகிறது. இதன் காரணமாக மேட்டூர் நீர்த்தேக்கத்தில் 93 டிஎம்சி கொள்ளளவிற்கு, 18 டிஎம்சி நீர் மட்டும் இருப்பதால் விவசாயத்தில் போடப்பட்ட பயிர்கள் பராமரிக்க முடியாமல் விளைந்த பயிர்கள் கருகி வருகின்றன. அதேபோல் நீர்த்தேக்கத்தில் 500 கன அடி மட்டுமே வெளியேற்றப்படுவதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்தனர்.