பெங்களூருவில் மகளிர் கழிப்பறையில் எட்டிப் பார்த்த இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


மகளிர் கழிப்பறை: 


பெங்களூருவில் தனியார் சட்ட பல்கலைக்கழகம் ஒன்று உள்ளது. இங்குள்ள பெண்கள் கழிப்பறையில் 21 வயது மாணவர் ஒருவர் எட்டிப்பார்த்ததுடன் அங்கு வீடியோவும் எடுத்துள்ளார். இதனையறிந்த மாணவிகள் புகார் கொடுத்ததின் பேரில் மாணவர் மீது பாலியன் வன்கொடுமை, ஐடி பிரிவு சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதே மாணவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் இதே புகாரில் சிக்கி பின்னர் மன்னிப்பு கொடுத்து தப்பிதார். ஆனால் அதன்பின்னரும்கூட அவர் அவருடைய போக்கில் எவ்வித மாற்றமும் காட்டாததால் தற்போது மீண்டும் அதே குற்றத்தை செய்ய அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


மாணவிகளின் துணிச்சல்:


இது போன்ற சம்பவங்களில் பெண்கள் துணிச்சலாக முன்வந்து போலீஸில் புகார் அளிக்க வேண்டும். நாம் குளிக்கும்போதோ உடைமாற்றும்போதோ நமக்கே தெரியாமல் வீடியோ எடுப்பதால் நாம் அசிங்கப்படு கூணிக் குறுகத் தேவையில்லை. அப்படியான தவறை செய்தவர்கள் தான் அசிங்கப்பட வேண்டும். பெண்ணின் மாண்பு அவள் உடல் சார்ந்தது இல்லை. அவள் அறிவு, திறமை என வெவ்வேறு வளர்ச்சி சார்ந்தது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இச்சம்பவத்தில் சட்டப் பல்கலைக்கழக மாணவிகள் துணிச்சலுடன் புகார் அளித்துள்ளது வரவேற்கத்தக்கது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.


பெண்களுக்கு எதிரான குற்றங்கள்:


நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடந்த 2021-ம் ஆண்டில் 4.28 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது, 2020-ம் ஆண்டைக் காட்டிலும் 15.3% அதிகம் ஆகும். கரோனா பேரிடர் காரணமாக பொதுமுடக்கம் அமலில் இருந்த 2020-ல் 3.71 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது, 2019-ல் பதிவான 4.05 லட்சம் வழக்குகளைவிட 8.3% குறைவாகும்.


கடந்த 2021-ல் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பெண்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகளில், கணவரால் அல்லது உறவினர்களால் கொடுமைப்படுத்தப்பட்ட வழக்குகளின் பங்கு 31.8% ஆக (1.36 லட்சம்வழக்குகள்) இருந்தது. இது, முந்தைய 2020 உடன் ஒப்பிடுகையில் 2% அதிகம்.


கணவர் அல்லது நெருங்கிய சொந்தங்களால் பெண்கள் கொடுமைப்படுத்தப்பட்டது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் பங்கு 2020-ல் 30 சதவீதம் ஆகவும், 2019-ல் 30.9% ஆகவும் இருந்தன.


பாலியல் வன்கொடுமை:


மேலும், 2021-ல் பெண்களை குறிவைத்து தாக்கப்பட்டது தொடர்பான வழக்குகளின் பங்கு 20.8% ஆகவும், அதைத்தொடர்ந்து கடத்தல் (17.6%), பாலியல் வன்முறை (7.4%) ஆகிய பிரிவுகளில் பதியப்பட்ட வழக்குகளும் கணிசமான அளவில் இருந்தன.


2020-ல் பதிவு செய்யப்பட்ட மொத்த வழக்குகளில் பாலியல் வன்முறை தொடர்பான வழக்குகளின் பங்கு 7.5 சதவீதம் ஆகவும், 2019-ல் இது 7.9% ஆகவும் இருந்தன.


எண்ணிக்கைஅடிப்படையில் கடந்த 2021-ல் பாலியல் வன்கொடுமை தொடர்பாக 31,677 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், பாதிக்கப்பட்ட பெண்களில் 18 வயதுக்கும் குறைவானவர்கள் 3,038 பேரும். 6-12 வயது வரையில் 183 பேரும், 6 வயதுக்கும் குறைவானோர் 53 பேரும் அடங்குவர்.