சாலையில் பயங்கர விபத்து:


பஞ்சாப் மாநிலத்தின் முக்கிய தேசிய சாலையில் தறிகெட்டு ஓடிய கார் கட்டுப்பாட்டை இழந்து, தலைகீழாக கவிழ்ந்த விபத்தின் காட்சிகள் வெளியாகியுள்ளன. மாநிலத்தில் உள்ள நவன்ஷஹர்-பக்வாரா தேசிய நெடுஞ்சாலையில் தான் இந்த பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட சாலையில் வெள்ளை நிற கார் ஒன்று அதிவேகமாக சென்ற போது, டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் குறுக்கே இருந்த மதிற்சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கார் ஓட்டுனர் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிருஷ்டவசமாக இந்த விபத்தில் வெறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை.






 


கார் பந்தயத்தால் விபத்தா?


அதேநேரம், மற்றொரு காருடன் பந்தயத்தில் ஈடுபட்டதால் தான் அந்த கார் விபத்துக்குள்ளானதாக அவ்வழியாக சென்ற பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அந்த விபத்து தொடர்பான வீடியோவையும் வெளியிட்டுள்ளனர்.


சாலையில் தறிகெட்டு ஓடிய கார்:


அந்த வீடியோவில், பல்வேறு வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் நவன்ஷஹர்-பக்வாரா தேசிய நெடுஞ்சாலையில், வளைந்து, நெளிந்து குறிப்பிட்ட வெள்ளை நிற கார் தறிகெட்டு ஓடியுள்ளது. ஓட்டுனர் ஒருவர் மட்டுமே இருந்த அந்த கார் திடீரென அவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் குறுக்கே இருந்த மதிற்சுவர் மீது மோதியுள்ளது. அப்போது மேல் நோக்கி பறந்த அந்த கார், தலைகீழாக சாலையில் கவிழ்ந்துள்ளது. இதில் கார் பலத்த சேதமடைந்தது. விபத்தில் தலையில் காயமடைந்த ஓட்டுனரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு போலீசார் நடத்திய விசாரணையில் தான், டயர் வெடிப்பு காரணமாக கார் கட்டுப்பாட்டை இழந்ததாக ஓட்டுனர் தெரிவித்துள்ளார். இந்த விபத்து தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. இதையடுத்து விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.