பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் நாடுகளுக்கான பிரிக்ஸ் கூட்டமைமைப்பில் மேலும் 6 நாடுகள் இணைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


புதியதாக இணையும் 6 நாடுகள்:


பிரிக்ஸ் கூட்டமைமைப்பில் மேலும் 6 நாடுகள் இணைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோகன்ஸ்பெர்க்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் மோடி மற்றும் தென்னாப்ரிக்க அதிபர் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய தென்னாப்பிரிக்கா அதிபர் சிரில் ரமபோசா,  ”அர்ஜெண்டினா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, எத்தியோப்பியா மற்றும் ஈரான் ஆகிய  6 நாடுகளை புதியதாக பிரிக்ஸ் அமைப்பில் இணைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். தென்னாப்ரிக்காவின் ஜோகன்ஸ்பெர்க்கில் தொடங்கி நடைபெற்று வரும், 15வது பிரிக்ஸ் மாநாட்டில் பேசிய மோடி இந்த முடிவை அறிவித்துள்ளார்.


சந்திரயான் குறித்து பெருமிதம்:


இதை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி “இந்தியாவின் சந்திரயான் 3 திட்டம் பெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்த சாதனை மனிதகுலம் அனைவரின் சாதனையாக ஏற்றுக் கொள்ளப்படுவது எங்களுக்கு பெருமை அளிக்கிறது. இந்தியாவின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த உலக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என பேசினார்.


பிரிக்ஸ் உச்சி மாநாடு:


பொருளாதார ரீதியாக வளர்ந்து வரும் நாடுகளின் கூட்டமைப்பாக கடந்த 2010ம் ஆண்டு பிரிக்ஸ் அமைப்பு உருவாக்கப்பட்டது. இதில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்ரிக்கா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் இந்த உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு நடைபெறுவது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக 2019ம் ஆண்டுக்குப் பிறகு, கடந்த 3 ஆண்டுகளாக பிரிக்ஸ் மாநாடு ஆன்லைன் வாயிலாகவே நடைபெற்று வந்தது. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தலைவர்கள் நேரடியாக பங்கேற்கும் நடப்பாண்டிற்கான மாநாடு, இரண்டு தினங்களுக்கு முன்பாக தென்னாப்ரிக்காவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.


நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றம்:


கடந்த இரண்டு நாட்களாக நடபெற்று வரும் மாநாட்டில் உறுப்பு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் பொது நாணயம் உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதோடு பிரிக்ஸ் அமைப்பில் மேலும் சில நாடுகளை சேர்த்து விரிவுபடுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த அமைப்பில் இணைவதற்காக சுமார் 23 நாடுகள் விண்ணப்பித்து இருந்த நிலையில்,  அதுகுறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. பிரிக்ஸ் அமைப்பில் கூடுதலாக நாடுகளை சேர்ப்பதற்கு இந்தியா மற்றும் சினா ஏற்கனவே ஆதரவு தெரிவித்து இருந்தன. இந்நிலையில் மாநாட்டின் முடிவில் கூடுதலாக 6 நாடுகலை இணைக்க முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதன் மூலம் பிரிக்ஸ் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளின் மொத்த எண்ணிக்கை 11 ஆக உயர உள்ளது.