திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ஒண்ணுபுரம் பகுதியை சேர்ந்த தனசேகர் இவரது மனைவி ஜோதிலட்சுமி இவர்களின்  ஒரே மகன் பிரகாஷ் (33).  இவர் கடந்த 10 ஆண்டுகளாக எல்லைப்பாதுகாப்பு படையில் சேர்ந்து பணியாற்றி வந்தார். இவருக்கு  ரேவதி என்ற மனைவியும், கவின் என்ற இரண்டு வயதுடைய மகனும் உள்ளனர். சொந்த கிராமத்தில் பிரகாஷின் பெற்றோருடன் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். 

 

கடந்த ஜனவரி மாதம் விடுமுறையில் வந்த பிரகாஷ் தனது சொந்த கிராமத்தில் சில நாட்களாக உறவினர்களுடன் தங்கிவிட்டு மீண்டும் பணிக்கு சென்றுள்ளார்.
  சிக்கிம் - சீனா எல்லைப் பகுதியில் பணியில் இருந்தபோது பிரகாஷ் உடல்நிலை குறைவால் உயிரிழந்ததாக அதிகாரிகள் மாவட்ட நிர்வாகத்திற்க்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

 



 

அதனடிப்படையில் மாவட்ட நிர்வாகம் பிரகாஷ் உறவினர்களுக்கு நேற்று பிரகாஷ் உயிரிழந்ததாக தகவல் தெரிவித்துள்ளனர். இறந்தவரின் உடல் தனி விமானம் மூலம் இன்று சென்னை விமான நிலையம் வருவதாகவும் அந்த உடலை இராணுவ அதிகாரிகள் பெற்று , உடலை தனி வாகனத்தில் சொந்த கிராமத்திற்க்கு கொண்டுவந்து நல்லடக்கம் செய்யவிருப்பதாக  இரணுவ அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்பட்டுள்ளது. 

 

மே 23 ஆம் தேதி நடைபெற உள்ள பிரகாஷின் இரண்டாவது தங்கையின்  திருமணத்திற்க்கு விடுமுறை கிடைக்க வில்லையென்றும் இருந்தாலும் தங்கையின் திருமணத்தை சிறப்பாக நடத்துங்கள், பின்னர் வந்து பார்க்கிறேன்  என்றும் திருமணம் நடைபெற உள்ள தங்கைக்கு செல்போனில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தான் பிரகாஷ் வீட்டிற்கு கடைசியாக பேசிய அழைப்பு. அண்ணன் வரவில்லை என்றாலும் அவரின் வாழ்த்து கிடைத்த மகிழ்ச்சியில் விரைவில் அவர் வந்து வாழ்த்துவார் என அவரது தங்கை காத்துக் கொண்டிருக்கிறார். குடும்பத்தின் மூத்தவர் என்கிற முறையில் பிரகாஷின் வருகையை அவரது குடும்பமே எதிர்பார்த்து காத்திருந்தது. அதற்கிடையில் அவரது தங்கை திருமணத்திற்கான ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்தது. 



 

இந்த நிலையில் தான் திடீரென பிரகாஷ் இறந்துவிட்டதால் அவர்கள் குடும்பத்தில் இடியாக செய்தி வந்துள்ளது. திருமண கொண்டாட்டங்களுக்கு தயாராக இருந்த குடும்பத்தில், பிரகாஷின் இறப்புச் செய்தி பேரிடியாக அமைந்துள்ளது. அண்ணன் வருவார்... ஆசிர்வதிப்பார் என்று காத்திருந்த தங்கைக்கு நெஞ்சமெல்லாம் அதிர்ச்சி. நாட்டை பாதுகாக்கும் பணியில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிர்தியாக செய்துள்ள பிரகாஷின் உடலை எதிர்பார்த்து ஒட்டுமொத்த குடும்பமும் கதறலுடன் காத்திருக்கிறது. சம்மந்தப்பட்ட பகுதி மக்களும், உறவினர்களும் தற்போது பிரகாஷ் வீட்டில் குவிந்து வருகின்றனர். எதுமாதிரியான உடல்நலக்குறைவு ஏற்பட்டது என்பது அவரது உடல் வந்து சேர்ந்த பின்பாக ராணுவ அதிகாரிகளால் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டிற்கு மட்டுமல்ல குடும்பத்திற்கும் அரணாக இருந்த மகன் இருந்த சம்பவம், அந்த குடும்பத்தை நிலைகுலையச் செய்துள்ளது.