விவசாயிகள் போராட்டம் குறித்து நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. கங்கனா ரனாவத் கூறிய கருத்துக்கு பாஜக விளக்கம் அளிக்கும் அளவுக்கு பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது.


கங்கனா ரனாவத் தெரிவித்த சர்ச்சை கருத்து: கடந்த 2020ஆம் ஆண்டு, மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டம் மேற்கொண்டனர். இறுதியில், விவசாயிகள் கோரிக்கையை ஏற்று வேளாள் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டது.


தொடக்கத்தில் இருந்தே, விவசாயிகள் போராட்டத்தை கடுமையாக விமர்சித்து வருபவர் கங்கனா ரனாவத். அரசாங்கம் சார்பில் கடும் நடவடிக்கைகளை எடுக்காமல் இருந்திருந்தால் வங்கதேசத்தில் ஏற்பட்டது போன்ற நெருக்கடி, விவசாயிகளின் போராட்டத்தால் இந்தியாவிலும் உருவாகி இருக்கும் என கங்கனா ரனாவத் தெரிவித்தார்.


இது பெரும் சர்ச்சையாகியுள்ள நிலையில், இதுகுறித்து பாஜக விளக்கம் அளித்துள்ளது. கங்கனா ரனாவத்தின் கருத்துகள் கட்சியின் கருத்துகளாக எடுத்து கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பாஜக வெளியிட்ட அறிக்கையில், "கங்கனா ரணாவத்துக்கு கட்சி சார்பில் கொள்கை விஷயங்களில் பேச அதிகாரம் இல்லை.


"இதை பத்தி எல்லாம் நீங்க பேசக்கூடாது"


அதற்கான அனுமதியும் வழங்கப்படவில்லை. எதிர்காலத்தில் இதுபோன்ற கருத்துகளை சொல்லாமல் தவிர்க்குமாறு ரணாவத்துக்கு பாஜக உத்தரவிட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபற்றி பஞ்சாப் பாஜக தலைவர் ஹர்ஜித் கிரேவால் கூறுகையில், "தனக்கு தொடர்பு இல்லாத விவசாயிகள் குறித்து கங்கனா பேசி இருக்கிறார். 


இது, அவருடைய தனிப்பட்ட கருத்து. பிரதமர் மோடியும், பாஜகவும் விவசாயிகளுக்கு நண்பர்கள். எதிர்க்கட்சிகள் எங்களுக்கு எதிராக செயல்படுகின்றன. கங்கனாவின் பேச்சும் அதையே செய்கிறது. உணர்ச்சிப்பூர்வமான விவகாரங்களான மதப் பிரச்சனைகள், மத அமைப்புகள் குறித்து அவர் பேசக்கூடாது" என்றார்.


கங்கனா ரனாவத் தெரிவித்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா, "இவை வெறும் கங்கனாவின் வார்த்தைகளா அல்லது வேறு யாரையோ நகலெடுத்து பேசி இருக்கிறாரா? இல்லையென்றால், இந்த விவகாரத்தில் பாஜக ஏன் மவுனம் காக்கிறது" என கேள்வி எழுப்பியுள்ளார்.