Mi-17 Black Box: விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் கருப்புப்பெட்டி கண்டுபிடிப்பு...

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி உள்ளிட்ட 3 பொருட்கள் காட்டேரி பகுதியில் உள்ள நச்சப்புராசத்திரம் மலைப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

Continues below advertisement

கோவை மாவட்டம் சூலூர் விமானப் படை தளத்தில் இருந்து நேற்று காலை 10.30 மணிக்கு நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் ராணுவ மையத்துக்கு Mi-17V5 ராணுவ ஹெலிகாப்டர் புறப்பட்டு சென்றது. அப்போது கடும் பனிமூட்டம் காரணமாக காட்டேரி மலை பகுதியில் உள்ள மலை முகடு ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் பயணம் செய்தனர். 

Continues below advertisement

விபத்தில் சிக்கி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். கேப்டன் வருண் சிங் 80 தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். 

பிபின் ராவத்தின் மறைவுக்கு நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துவருகின்றனர். பிபின் ராவத்தின் மறைவையடுத்து தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும், அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும் பிபின் ராவத் பிறந்த மாநிலமான உத்தரகாண்ட் அரசு அறிவித்துள்ளது.

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி உள்ளிட்ட 3 பொருட்கள் காட்டேரி பகுதியில் உள்ள நச்சப்புராசத்திரம் மலைப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. இந்த கருப்புப்பெட்டியை டெல்லி அல்லது பெங்களூர் கொண்டு செல்லப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. 

டெல்லியிலிருந்து வந்த தொழில்நுட்ப குழுவும், வெலிங்டன் ராணுவ மைய குழுவும் இதனை கண்டுபிடித்தது.3 மணிநேரமாக நடைபெற்ற தீவிரமான தேடுதலுக்கு பிறகு இந்த கறுப்புப்பெட்டியை குழு கண்டுபிடித்ததாகவும் ராணுவத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பகுதியில் தடயவியல் துறை இயக்குநர் சீனிவாசன் தலைமையில் 13 பேர் கொண்ட குழு ஆய்வு நடத்தி வருகிறது. 5 அதிகாரிகள் கொண்ட குழு தற்போது விபத்து நடந்த காட்டேரி பகுதியில் தடயங்களை சேகரித்து வரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று மக்களவையிலும், மாநிலங்களவையிலும் 11 மணிக்கு அறிக்கை தாக்கல் செய்கிறார். தற்போது, மறைந்த முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் உருவ படத்திற்கு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola