சமீப காலமாக, சமூக விரோதிகள் பொது இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. அமெரிக்காவில் சர்வ சாதாரணமாக இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. ஆனால், அங்கு, உரிமம் பெற்று கொண்டு துப்பாக்கி வைத்து கொள்ள தனிநபர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.


இந்தியாவிலோ நிலைமை வேறு. உயிருக்கு ஆபத்து இருக்கும் நபர்களுக்கு மட்டும்தான் துப்பாக்கி வைத்து கொள்ள அனுமதி உண்டு. இப்படிப்பட்ட சூழலில், இந்தியாவில் பொது இடங்களில் நடக்கும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.


பிகார் உணவகத்தில் நுழைந்த விஷமிகள்:


அந்த வகையில், பிகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள உணவகம் ஒன்றில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோவை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதே சமயம், பெகுசராய் மாவட்டத்தில் ஒரு ஓய்வுபெற்ற ஆசிரியர் சுட்டுக் கொல்லப்பட்ட மற்றொரு துப்பாக்கிச் சூடு சம்பவம் பதிவாகியுள்ளது. இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பான கூடுதல் விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை.


இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் பிரதாப் சிங் கூறுகையில், "இங்கு, குறைந்தது 10 ரவுண்டு துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. முதற்கட்ட விசாரணையில் இது மக்களை பயமுறுத்துவதற்காக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு எனத் தெரிகிறது. இது யாரையும் குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு அல்ல.


சரமாரி துப்பாக்கிச்சூட்டால் அலறி அடித்து ஓடிய மக்கள்:


இதில் ஈடுபட்ட 4 பேர் குறித்த தகவல் கிடைத்துள்ளது. இந்த குற்றத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றார்.


சமீபத்தில், மேற்குவங்கம் கொல்கத்தாவில் இந்திய அருங்காட்சியகத்துடன் இணைக்கப்பட்டிருந்த ராணுவ குடியிருப்பில் சிஐஎஸ்எஃப் கான்ஸ்டபிள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் துணை ராணுவ வீரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் பலர் காயமடைந்தனர்.






அதேபோல, கடந்த ஏப்ரல் மாதம், பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் அதிகாலை 4:35 மணி அளவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடைபெற்றதை உறுதி செய்து இந்திய ராணுவத்தின் வெஸ்டர்ன் கமாண்ட் அறிக்கை வெளியிட்டது.
இதையடுத்து, அந்த பகுதியை காவல்துறையும் ராணுவத்தினரும் சுற்றி வளைத்து, அங்கு பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக, விசாரணை நடைபெற்று வந்தது.


இதையும் படிக்க: Rajinikanth Troll: "ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு கறுப்பு தினம்.." "21 வயசு சின்னவர் கால்ல விழுந்துட்டாரு" : புலம்பித் தீர்க்கும் நெட்டிசன்கள்!