பீகார் மாநிலத்தின் கல்வி அமைச்சர் சந்திரசேகர், கடவுள் ராமர் குறித்து பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியது கடும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. 


நாடு முழுவதும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் முழு வீச்சில் களப்பணியாற்றி வருகின்றன. மக்களை கவரும் வகையிலான நடவடிக்கைகளை தொண்டர்கள் மேற்கொண்டு வரும் நிலையில், அவர்களின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் மக்கள் கவனித்து வருகின்றனர். இதனால் பாசிட்டிவ் எண்ணங்களை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என கட்சி மேலிடம் தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. 


இப்படியான நிலையில் பீகார் மாநிலத்தில் கல்வி அமைச்சர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனதா தள ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கட்சியுடன் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி அமைத்துள்ளது. முதலமைச்சராக நிதிஷ்குமார் பதவி வகித்து வருகிறார். இவரது அமைச்சரவையில் கல்வி அமைச்சராக சந்திரசேகர் யாதவ் உள்ளார். இவர்  மாதேபுரா சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சராகி இருந்தார். 


இப்படியான நிலையில் சில தினங்களுக்கு முன் ராமாபூர் கிராமத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் சந்திரசேகர் யாதவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "என் கனவில் ராமர் வந்து, மக்கள் என்னை சந்தையில் விற்கிறார்கள். என்னை விற்காமல் காப்பாற்றுங்கள்” என்று கூறியதாக சொல்லி கூடியிருந்த தொண்டர்களையும், பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.


மேலும், ‘ராமர் கூட சாதி நிலைகளை பொருட்படுத்தாது பழங்குடி பக்தரான ஷபரி அளித்த உணவை உட்கொண்டார். ஆனால் இன்றும் ஷபரியின் மகன் கோவில்களுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயில்கள் கூட கங்கை நீரால் சுத்திகரிக்கப்படுகின்றன. குடியரசுத் தலைவர் மற்றும் முதல்வர் கூட கோவில்களுக்கு செல்ல விடாமல் தடுக்கப்படுகிறார்கள்.இது வருத்தம் அளிக்கிறது. சாதிய முறைக்கு எதிராக இருந்த கடவுள் ராமர் விரும்பிய வழியில் நாட்டை நாம் உருவாக்குமோம்" என்று  அமைச்சர்  சந்திரசேகர் யாதவ் கூறினார். அவரின் இந்த பேச்சு பீகார் மாநிலத்தில் கடும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. பலரும் சந்திரசேகருக்கு எதிரான கண்டனங்களை தெரிவித்துள்ளனர். 


ராஷ்டீரிய ஜனதா தள கட்சியை சேர்ந்த சந்திரசேகர் கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது, ‘56 வகையான உணவு வகைகளை செய்து அவற்றில் பொட்டாசியம் சயனைடை கலந்து விட்டால், நீங்கள் உண்ண முடியுமா?. அப்படித்தான் இந்துத்துவத்தின் புனித நூல்களிலும் தெரிவிக்கப்பட்டு உள்ளனது என பேசி பெரும் பிரச்சினையை கிளப்பியிருந்தார். 




மேலும் படிக்க: TTF Vaasan: காலையிலேயே அதிரடியாக கைது செய்த காஞ்சி போலீஸ்! சிறைக்கு செல்கிறார் TTF வாசன்!