போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக பிரபல யூடியூபர் TTF வாசனை, காஞ்சிபுரம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக அவர் மீது ஏற்கனவே இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது கூடுதலாக மேலும் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்குவது, கவனக்குறைவாக செயல்படுவது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


அண்மையில் காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டி பகுதியில் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் விலிங் செய்தபோது, நிலைதடுமாறி கீழே விழுந்து TTF வாசனுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்நிலையில், காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட TTF வாசன், பாலுசெட்டி காவல் நிலையத்திற்கு விசாரணக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், அவரை  நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசன்:


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் டி.டி.எஃப் வாசன். மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி சென்று அதனை வீடியோவாக எடுத்து யூடியூபில் பதிவேற்றம் செய்து  பிரபலமானவர்.  அதிவேக பயணம் காரணமாக பல வழக்குகளையும் சந்தித்துள்ளார். டிடிஎஃப் வாசன் 2K கிட்ஸ்களுக்கு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறார் என்ற விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன. அதேநேரம்,  டி.டி. எஃப். வாசனை யூடியூபில் சப்ஸ்கிரைப் செய்துள்ளவர்களின் எண்ணிக்கை 35 லட்சத்தை தாண்டியுள்ளது.  இதனிடையே, செல்அம் என்ற இயக்குனர் இயக்கி வரும் மஞ்சள்வீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். சாலைகளில் அதிவேகமாக செல்லும் டிடிஎqப் வாசனை பல முறை பலரும் கண்டித்தும், விமர்சித்தும் வந்த நிலையில் அவர் தொடர்ந்து இரு சக்கர வாகனங்களில் சாகச பயணம் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் தான் அவர் விபத்தில் சிக்கினார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்தில் சிக்கிய டி.டி.எஃப். வாசன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். 


லைசன்ஸ் ரத்தா?


டி.டி.எஃப் வாசனின்  இந்த சாகச பயணங்களும், அதிவேகமாக வாகனம் செலுத்துவதும் பொதுமக்களுக்கு இடையூறாக மட்டுமின்றி, உயிருக்கு ஆபத்தானதாகவும் உள்ளது. எனவே, அவரது வாகனம் ஓட்டுவதற்கான உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என சமூக வலதளங்களில் பலரும் வலியுறுத்தி வந்தனர்.  இந்நிலையில், டிடிஎஃப் வாசனின் இருசக்கர வாகன ஓட்டும் உரிமத்தை ரத்து செய்ய  தமிழ்நாடு போக்குவரத்து ஆணையரகம் பரிந்துரை செய்துள்ளது. இதனால், விரைவில் வாசனின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்று அடுத்தடுத்து வெளியாகும் செய்திகள் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது